கோலா திரங்கானு, ஜூலை 16 — இந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரை நாடு முழுவதும் சுமார் 2,467 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவாகியுள்ளன.
மேலும், இல்லத்தரசிகள் தான் அதிக குடும்ப வன்முறைக்கு ஆளாகிறார்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன என பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு துணை அமைச்சர் டத்தோஸ்ரீ நோரைனி அகமட் கூறினார்.
“ஆனால் சிலர் தாங்கள் பாதிக்கப்பட்டவர்கள் என்பதை உணராமலேயே இருக்கலாம். ஏனெனில் இந்த துஷ்பிரயோகம் என்பது வெறும் உடல் ரீதியானது மட்டுமல்ல, உணர்ச்சி ரீதியாகவும் அடங்கும். சில நேரங்களில் குற்றவாளிகள் 'தலைகீழ் உளவியலையும்' ‘reverse psychology’ பயன்படுத்தலாம்.
“பெரும்பாலான துஷ்பிரயோகம் பாதிக்கப்பட்டவருக்கு மிக நெருக்கமானவர்களாலோ அல்லது குடும்ப உறுப்பினர்களாலோ செய்யப்படுகிறது என்பதையும் ஆய்வுகள் கண்டறிந்துள்ளன,” என்று உள்நாட்டு வன்முறையில் பெண்கள் நல்வாழ்வு திட்டத்தை (Aku Wanita @ KRT) அறிவித்த பின்னர் அவர் செய்தியாளரிடம் கூறினார்.
இதற்கிடையில், ஜனவரி முதல் ஏப்ரல் வரை, திரங்கானுவில் 104 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நோரைனி கூறினார்.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது எண்ணிக்கை 130ஆக இருந்துள்ளது. இருப்பினும், இந்த எண்ணிக்கை கவலையளிக்கிறது.
Aku Wanita @ KRT திட்டம் உட்பட குடும்ப வன்முறை வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைக்க அமைச்சகம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.
— பெர்னாமா


