செர்டாங், ஜூலை 16 - ஆள் நடமாட்டமின்றி காலியாகக் காணப்பட்ட
நான்கு மாடி அடுக்குமாடி குடியிருப்பிலுள்ள மூன்று வீடுகள் திரை
மறைவில் இணைய சூதாட்ட மையமாக செயல்பட்டு வந்தது.
அதிகாரிகளின் அதிரடிச் சோதனையில் அம்பலத்திற்கு வந்தது.
இங்குள்ள புசாட் பண்டார் புத்ரா பெர்மாயில் உள்ள அந்த குடியிருப்புகள்
மீது மலேசிய குடிநுழைவுத் துறை, சுபாங் ஜெயா மாநகர் மன்றம் மற்றும்
பொது நடவடிக்கை பிரிவு நேற்றிரவு ஒருங்கிணைந்த நடவடிக்கையை
மேற்கொண்டன.
சூதாட்ட மையங்களாகப் பயன்படுத்தப்பட்டு வந்த அந்த மூன்று வீடுகளும்
உள்நாட்டு ஆடவர்களின் பெயரில் இயங்கி வந்தது, மின்சார மற்றும் நீர்
கட்டண பில்களின் மூலம் தெரிய வந்ததாகக் குடிநுழைவுத் துறையின்
நடவடிக்கைப் பிரிவு துணைத் தலைமை இயக்குநர் ஜெப்ரி எம்போக் தஹா
கூறினார்.
அந்த குடியிருப்புகள் மீது அதிரடிச் சோதனை மேற்கொள்ளப்பட்ட போது
அவை காலியாகக் காணப்பட்டன. அங்கிருந்தவர்கள் தப்பியோடி விட்டதாக
சந்தேகிக்கப்படும் வேளையில் கையடக்க கணினி, மோனிட்டர், நாற்காலி,
மேசை போன்ற பொருள்கள் மட்டுமே இருந்தன என்று அவர் சொன்னார்.
இந்த சூதாட்டம் மையம் கண்டு பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அதன்
தொடர்பில் மேல் நடவடிக்கை எடுக்கும் பொறுப்பை சுபாங் ஜெயா
மாநகர் மன்றத்திடம் ஒப்படைத்துளோம் என இந்த சோதனை
நடவடிக்கைக்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த போது அவர்
தெரிவித்தார்.
குடியிருப்புக்கு வெளியே நடமாட்டத்தைக் கண்காணிக்கும் வகையில் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், அந்த குடியிருப்பில் வசித்து வரும் அந்நிய நாட்டினரை இலக்காக கொண்டு அக்கும்பல் சூதாட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளது என்றார்.


