ஷா ஆலம், ஜூலை 15 - இம்மாதம் 18ஆம் தேதி தொடங்கி ஆறு நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் என்பதோடு சில பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சிஸ் வரை இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு அருகே மேற்கு பசிபிக் பெருங்கடலில் வெப்பமண்டல புயல் உருவாக்கம் கண்டதே இந்த வெப்ப வானிலைக்கு காரணம் என்று அது கூறியது.
வானிலை மாதிரி ஆய்வின் அடிப்படையில், ஜூலை 18 முதல் ஜூலை 23 வரை நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வறட்சி நிலை காணப்படுதோடு குறைவான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வுத் துறை இன்று வெளியிடப்பட்ட ஒரு குறிப்பிடத்தக்க வானிலை முன்னறிவிப்பில் தெரிவித்தது.
அண்மைய மற்றும் சரிபார்க்கப்பட்ட வானிலை தகவல்களுக்கு அதன் வலைத்தளம் , அதிகாரப்பூர்வ சமூக ஊடகங்கள் அல்லது myCuaca செயலியை தொடர்ந்து பார்க்குமாறு பொதுமக்களுக்கு அம்மையம் அறிவுறுத்தியது .
வருடாந்திர தென்மேற்கு பருவமழை காரணமாக செப்டம்பர் மத்தியப் பகுதி வரை நாடு வெப்பமான வானிலையை எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வுத் துறை தலைமை இயக்குநர் முகமது ஹிஷாம் முகமது அனிப் கடந்த மே மாதம் கூறியிருந்தார்.
குறைந்த ஈரப்பதம் மற்றும் நிலையான வளிமண்டலம் காரணமாக இந்தப் பருவம் வறண்ட சூழ்நிலைகளால் வகைப்படுத்தப்படுகிறது.
வெப்ப வானிலையின்போது சிலாங்கூரின் நீர் தேவையை ஈடுகட்ட மூல நீர் விநியோகம் போதுமானது என்றும் முக்கிய அணைகள் மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை தாக்குப்பிடிக்கும் அளவுக்கு கொள்ளளவைக் கொண்டுள்ளன என்றும் உள்கட்டமைப்பு மற்றும் விவசாயத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ இஷாம் ஹாஷிம் அண்மையில் கூறியிருந்தார்.
தென்மேற்கு பருவமழையின் போதும் சிலாங்கூரில் அணைகளின் நீர்மட்டம் பல மாதங்களுக்கு நிலையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமாக அக்டோபர் மாதத்தில் ஏற்படும் பருவமழை மாற்றம் மற்றும் நவம்பர் முதல் மார்ச் வரையிலான வடகிழக்கு பருவமழையின் போது நீர்மட்டம் மேம்படக்கூடும். அப்போது நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் அதிக மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
சிலாங்கூரில் உள்ள பல முன்னாள் ஈயச் சுரங்கங்கள் மற்றும் ஆற்றுப் படுகைகள் உட்பட 100 குளங்கள் வறட்சியைச் சமாளிக்க மாநிலத்திற்குப் பயன்படுத்தப்படும் என்று இஷாம் மேலும் கூறினார்.


