தெஹ்ரான், ஜூலை 10 - இஸ்ரேலிய ஆட்சியாளர்களின் அதிகார
விரிவாக்கம் மற்றும் ஆதிக்கத்தின் அபாயம் குறித்து எச்சரிக்கையுடன்
இருக்கும்படி வட்டார நாடுகளை ஈரானிய வெளியறவு அமைச்சர் அப்பாஸ்
அராக்கி அறிவுறுத்தியுள்ளார்.
வட்டார நாடுகள் தங்களின் உள்நாட்டு பாதுகாப்பை உருவாக்குவதற்கும்
வலுப்படுத்துவதற்கும் தேவையான முயற்சிகளை தீவிரப்படுத்த வேண்டும்
என்ற அவர் வலியுறுத்தியதாக இஸ்லாமிய குடியரசு செய்தி நிறுவனம்
(இர்னா) கூறியது.
ரியாத்தில் சவூதி அரேபிய தற்காப்பு அமைச்சர் காலிட் பின் சல்மானுடன்
நேற்று நடத்திய சந்திப்பின்போது அவர் இந்த எச்சரிக்கையை
வெளியிட்டார். ஈரான் மீதான இஸ்ரேலிய தாக்குதலைத் தொடர்ந்து
இருவழி உறவுகள் மற்றும் வட்டார பாதுகாப்பு குறித்து பேச்சு
நடத்துவதற்காக அராக்கி இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
அமைதி நோக்கத்திற்கான அணுசக்தி நிலையங்கள் உள்பட ஈரான் மீது
இஸ்ரேலிய இராணுவம் நடத்திய தாக்குதல்களை அராக்கி வன்மையாக
கண்டித்தார். இது மன்னிக்கவே முடியாத மாபெரும் குற்றம் என்பதோடு
முன்பு எப்போதும் நிகழ்ந்திராத அத்துமீறல் என இஸ்ரேலின் அந்த
தாக்குதலை அவர் வர்ணித்தார்.
இஸ்ரேலின் இந்த தாக்குதலைக் கண்டிப்பதில் சவூதி அரேபியா
கடைப்பிடித்த உறுதியான மற்றும் பொறுப்புணர்வுமிக்க நிலைப்பாட்டை
அவர் பெரிதும் பாராட்டினார்.
இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து நடைபெற்று வரும் பாதுகாப்பு
மற்றும் தற்காப்பு பேச்சுவார்த்தைகளை வரவேற்ற அவர், சவூதி அரேபிய
அமைச்சர் அண்மையில் ஈரானுக்கு வருகை மேற்கொண்டது வட்டார
நிலைத்தன்மைக்கான முக்கியப் படியாகும் என்றார்.
இதனிடையே, ஈரான் மீதான தாக்குலைக் கண்டித்த சவூதி அரேபிய
வெளியுறவு அமைச்சர், இந்த தாக்குதலில் உயிரிழந்த இராணுவ வீரர்கள்
மற்றும் பொதுமக்களுக்கு தமது அனுதாபத்தை தெரிவித்துக் கொண்டார்.


