ஷா ஆலம், ஜூலை 8 - ஜாலான் கோல சிலாங்கூர்-கோலாலம்பூர், சாலையின் 23வது கிலோமீட்டரில் சுங்கை பூலோ நோக்கிச் செல்லும் தடத்தில் பேருந்தின் பயணப் பாதையை தடுத்ததாகக் கூறப்படும் சைக்கிளோட்டிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
பேருந்தின் பயணத்திற்கு தடையை ஏற்படுத்தும் அளவுக்கு அவர்கள் குழுவாக இடதுபுறத் தடத்தில் பயணித்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாகக் கோல சிலாங்கூர் மாவட்டப் போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் அசாருடின் தாஜூடின் கூறினார்.
இந்த சம்பவம் ஜூலை 7 ஆம் தேதி காலை சுமார் 9.35 மணியளவில் நடந்ததாக நம்பப்படுகிறது. கும்பலாக சவாரி செய்ததற்காக 1959ஆம் ஆண்டு
சாலை போக்குவரத்து விதிமுறைகளின் 42(3) வது பிரிவின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது. இருப்பினும், இதனால் விபத்து ஏதும் ஏற்படவில்லை
என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
இந்த சம்பவத்தின் எதிரொலியாக பேருந்து ஓட்டுநருக்கும் சைக்கிளோட்டிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதைச் சித்தரிக்கும் காணொளிக் காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவியது.
இச்சம்பவம் குறித்து தகவல் தெரிந்த பொதுமக்கள் கோல சிலாங்கூர் மாவட்டக் காவல் தலைமையகத்தின் செயல்பாட்டு அறையை 03-3289 1222 என்ற எண்ணில் அல்லது அருகிலுள்ள எந்த காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு விசாரணைக்கு உதவ முன்வருமாறு அவர் கேட்டுக் கொண்டார்.


