கோலாலம்பூர், ஜூலை 7 - இந்தோனேசியா, பாலி தீவில் ஃபெரி மூழ்கிய சம்பவத்தில் மலேசியர் ஒருவர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற தகவலை உறுதிப்படுத்தும் பொருட்டு இந்தோனேசிய அதிகாரிகளுடன் ஜகார்த்தாவில் உள்ள மலேசிய தூதரகம் நெருக்கமாகப் பணியாற்றி வருகிறது.
சம்பந்தப்பட்ட அந்நபரின் அடையாளத்தை உறுதிபடுத்தும் செயல்முறை மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளியிட்ட ஓர் அறிக்கையில் வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.
தொடக்கக்கட்ட விசாரணையில் இந்தோனேசிய அமலாக்கத் தரப்பை மலேசிய தூதரகம் தொடர்பு கொண்ட நிலையில் மலேசியர் எவரும் பாதிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
எனினும், மலேசியர் ஒருவர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று வெளியாகி இருக்கும் புதிய தகவலை உறுதிபடுத்தும் பொருட்டு அந்நாட்டின் அமலாக்கத் தரப்புடன் இணைந்து தூதரக தரப்பினர் பணியாற்றி வருவதாக அவ்வறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ளது.
தேடல் மற்றும் மீட்புப் பணிகள் தொடரப்படும் நிலையில், அனைத்து தொடர்புடைய நிறுவனங்களுடனும் நெருக்கமான மற்றும் தொடர்ச்சியான தொடர்பை தூதரகம் மேற்கொள்ளும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தூதரகத்தின் உதவி தேவைப்படும் மலேசியர்கள் ஜகார்த்தாவில் உள்ள மலேசிய தூதரகத்தை +6281380813036 என்ற தொலைபேசி எண் அல்லது mwjakarta@kin.gov.my என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.
பெர்னாமா


