முக்கா, ஜூலை 7- கம்போங் பெலாவாய் அருகே பெலாவாய் கடற்கரையில் படகு மூழ்கிய சம்பவத்தில் காணாமல் போனவர்களில் மேலும் ஒருவரின் உடல் நேற்று கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது.
அடையாளம் இன்னும் கண்டறியப்படாத சிறுவனின் உடல் சம்பவம் நடந்த இடத்திலிருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் மாலை 6.00 மணியளவில் கண்டு பிடிக்கப்பட்டதாக சரவாக் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கை மையத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
படகு விபத்தில் சிக்கியவர்களின் சமீபத்திய நிலையைப் பொறுத்தவரை ஐவர் இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஐந்து பேரை இன்னும் காணவில்லை. ஏழு பேர் உயிர் பிழைத்துள்ளனர் என்று அவர் இன்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
சம்பவம் நடந்த இடத்திலிருந்து மூன்று கிலோமீட்டர் சுற்றளவில் மேற்கொள்ளப்பட்டு வந்த தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் நேற்று மாலை 6.40 மணிக்கு நிறுத்தப்பட்டு இன்று தொடரவிருக்கிறது.
கம்போங் பெலாவாய் மீன்பிடி படகுத் துறையிலிருந்து சியோன் பெலிடா தேங்காய்த் தோட்ட படகுத் துறைக்கு 17 இந்தோனேசிய பயணிகளை ஏற்றிச் சென்ற ஃபைபர் கிளாஸ் படகு பிற்பகல் 2.11 மணியளவில் மூழ்கியதாகக் கூறப்படுகிறது.
உயிர் பிழைத்த ஏழு பேரில் நான்கு ஆண்கள், இரண்டு பெண்கள், ஒரு சிறுவன் ஆகியோர் அடங்குவர். பலியான நான்கு பேரில் இரண்டு பெண்கள், ஒரு சிறுவன் மற்றும் ஒரு சிறுமி ஆகியோரும் அடங்குவர்.


