(ஆர்.ராஜா)
ஷா ஆலம், ஜூலை 7 - அரசாங்க மற்றும் தனியார் உயர்கல்விக்கூடங்களில் பயிலும் குறைந்த வருமானம் பெறும் பி40 பிரிவைச் 486 இந்திய மாணவர்கள் சிலாங்கூர் மாநில அரசிடமிருந்து கல்வி கட்டண உதவி நிதியைப் பெற்றனர்.
இங்கு மாநில அரசு தலைமைச் செயலகத்திலுள்ள ஜூப்ளி பேராக் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி சம்பந்தப்பட்ட மாணவர்களிடம் கல்விக் கட்டண உதவியை வழங்கினார்.
கல்வியைத் தொடர்வதில் வசதி குறைந்த இந்திய மாணவர்கள் எதிர்நோக்கும் நிதிச்சுமையை குறைக்கும் நோக்கிலான இத்திட்டத்திற்கு இந்த ஆண்டு மொத்தம் 12 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மந்திரி புசார் தமது உரையில் குறிப்பிட்டார்.
இந்த திட்டத்தின் கீழ் டிப்ளோமா கல்வியை தொடரும் மாணவர்களுக்கு தலா 2,000 வெள்ளியும் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு 3,000 வெள்ளியும் கல்விக் கட்டண உதவியாக வழங்கப்படுவதாக அவர் சொன்னார்.
கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே முழுமையாகப் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக தகுதியுள்ள மாணவர்களின் கணக்குகளில் இப்பணம் நேரடியாக டெபாசிட் செய்யப்படும் என்று அமிருடின் விளக்கினார்.
இந்த கல்விக் கட்டண உதவித் திட்டத்தை நாங்கள் கடந்த 2013ஆம் ஆண்டு முதல் நடத்தி வருகிறோம். இது மாணவர்களுக்கு, குறிப்பாக டிப்ளோமா மற்றும் பட்டப்படிப்பைத் தொடரும் வசதி குறைந்த இந்திய சமூகத்தினருக்கு வழங்கப்படும் கல்வி உதவியாகும் என அவர் கூறினார்.
இதனிடையே, வாழ்க்கைச் செலவின அதிகரிப்பை கருத்தில் கொண்டு இந்த கல்வி கட்டண உதவித் தொகையின் அளவு மற்றும் அதனைப் பெறுவதற்கான வருமான வரம்பை மாநில அரசு அதிகரிப்பதற்கான சாத்தியம் உள்ளதை மந்திரி புசார் கோடிகாட்டினார்.
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் தங்கள் கல்வியை தங்கு தடையின்றி மேற்கொள்வதை உறுதி செய்ய இந்நடவடிக்கை துணைபுரியும் என்றார் அவர்.
இந்த திட்டத்திற்கு மொத்தம் 600 விண்ணப்பங்கள் வந்தன. மாதம் 3,000 வெள்ளி குடும்ப வருமான வரம்பு நிபந்தனையை பூர்த்தி செய்த 486 மாணவர்கள் நிதியுதவி பெறத் தகுதி பெற்றுள்ளனர் என்றார் அவர்.
3,000 வெள்ளி குடும்ப வருமான வரம்பு என்பது மிகவும் குறைவானத் தொகையாகும். இந்தத் தொகையை வரும் ஆண்டுகளில் உயர்த்துவது குறித்து பரிசீலிப்போம் என அவர் சொன்னார்.


