ஜித்ரா, ஜூலை 5- வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் (பிளஸ்) நுழையும் தடத்தில் இன்று காலை 8.05 மணியளவில் போலீசாருடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படும் இரண்டு ஆடவர்கள் கொல்லப்பட்டனர்.
இச்சம்பவம் நிகழ்வதற்கு முன்னர் அந்தப் பகுதியில் ரோந்து சென்ற காவல்துறை அதிகாரிகள் சந்தேகத்திற்கிடமான முறையில் நான்கு சக்கர இயக்க வாகனம் செல்வதைக் கண்டு அதனை நிறுத்த உத்தரவிட்டதாக கெடா காவல்துறைத் தலைவர் டத்தோ ஃபிசோல் சாலே தெரிவித்தார்.
ஒத்துழைக்க மறுத்த சந்தேக நபர்கள் போலீஸ் வாகனத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதன் விளைவாக இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. துப்பாக்கிச் சூட்டில் வாகனத்தில் இருந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என அவர் சொன்னார்.
வாகனத்தில் நடத்தப்பட்ட சோதனையில் இரண்டு ரிவால்வர்கள் மற்றும் பகுதி தானியங்கி கைத்துப்பாக்கிகள், பயன்படுத்தப்படாத பல தோட்டாக்கள், ஒரு கத்தி மற்றும் குற்றச் செயல்களைச் செய்யப் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் பல உபகரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன என்று அவர் இன்று சம்பவம் நடந்த இடத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
சந்தேக நபர்களில் 41 வயதுடைய ஒருவர் 40க்கும் மேற்பட்ட குற்றப் பதிவுகளைக் கொண்டிருந்தார் என்றும் அடையாள ஆவணம் எதுவும் இல்லாததால் மற்றவரின் அடையாளம் இன்னும் தெரியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
நாடு முழுவதும் போதைப்பொருள் கடத்தல், கொள்ளை, தொழிற்சாலை கொள்ளைகள் உள்ளிட்ட வன்முறை குற்றங்களைச் செய்யும் பெரிய கும்பலுடன் அவர்களுக்கு தொடர்பிருக்கலாம் என நாங்கள் நம்புகிறோம். இந்தக் கும்பல் 2020 முதல் செயல்பட்டு வருவதாக நம்பப்படுகிறது என அவர் தெரிவித்தார்.


