ஷா ஆலம், ஜூன் 26- கிளன்மேரி இலகு இரயில் நிலையம் (எல்.ஆர்.டி.) அருகே நிறுத்தப்பட்டிருந்த ஏழு வாகனங்கள் அந்த வழியாகச் சென்ற கனரக வாகனம் ஒன்றினால் மோதப்பட்டு சேதமடைந்தது தொடர்பில் சம்பந்தப்பட்ட வாகனமோட்டிகளிடமிருந்து காவல்துறைக்கு ஏழு புகார்கள் வந்துள்ளன.
நேற்று பிற்பகல் 2.10 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்தது விசாரணையில் தெரியவந்துள்ளதாக ஷா ஆலம் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி முகமட் இக்பால் இப்ராஹிம் கூறினார்.
எல்.ஆர்.டி. இரயிலில் வேலைக்குச் செல்வதற்காக அதன் உரிமையாளர்கள் சாலையோரத்தில் தங்கள் கார்களை நிறுத்தியிருந்தபோது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
வேலை முடிந்து எல்.ஆர்.டி. நிலையத்திற்குத் திரும்பிய போது தங்கள் வாகனங்கள் சேதமடைந்திருப்பதைக் கண்டு உரிமையாளர்கள் அதிர்ச்சியடைந்ததாக இக்பால் கூறினார்.
இச்சம்பவம் தொடர்பில் நேற்று மாலை 4.00 மணி வரை ஷா ஆலம் காவல் தலைமையகத்தின் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கப் பிரிவு ஏழு புகார்களைப் பெற்றுள்ளது.
அருகிலுள்ள பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா (சிசிடிவி) காட்சிகளை சேகரித்து இந்த சம்பவத்திற்கு பொறுப்பான வாகனத்தை (அல்லது தரப்பினரை) அடையாளம் காண விசாரணை அதிகாரி முயன்று வருகிறார் இந்த வழக்கு 1959ஆம் ஆண்டு சாலை போக்குவரத்து விதிகளின் 10 வது பிரிவின் கீழ் விசாரிக்கப்படுகிறது என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இதன் தொடர்பில் தகவல் அறிந்த பொதுமக்கள் விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் அப்துல் நாசர் பெப்பிங்கை 012-2863875 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


