சைபர்ஜெயா, ஜூன் 26 - சைபர்ஜெயாவில் கடந்த செவ்வாய்க்கிழமை காலை தனது தங்கும் விடுதி அறையில் 20 வயதுடைய பல்கலைக்கழக மாணவி ஒருவர் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது ஒரு கொலை என காவல்துறையினர் தற்போது உறுதிப்படுத்தியுள்ளனர்.
சரவாக், கூச்சிங்கைச் சேர்ந்த 20 வயதான அந்த இளம் பெண், உடல் முழுக்க இரத்கக் காயங்களுடன் அறையில் கிடந்ததை செவ்வாய்கிழமைக் காலை அவரின் தோழிகள் கண்டறிந்து பின்னர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடல் இயக்க சிகிச்சைத் துறையில் (Physiotherapy) இளங்கலைப் பட்டப் படிப்பை மேற்கொண்டு வரும் அம்மாணவி, இதர 5 தோழிகளுடன் ஒரே அறையில் தங்கி வந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டது.
எனினும், தோழிகள் ஐவரும் ஜூன் 21-ஆம் தேதி முதல் விடுமுறைக்காக சொந்த ஊர்களுக்குத் திரும்பி விட்டனர். தேர்வுக்குத் தயாராகி வருவதால் இவர் மட்டும் தனியாக இருந்துள்ளார்.
மேலும், அம்மாணவியின் மடிக்கணினி உள்ளிட்ட சில முக்கிய உடைமைகள் காணாமல் போயிருப்பதும் தொடக்கக் கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது.
அம்மாணவியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில் கொலையாளிக்கு எதிரான தேடுதல் வேட்டைத் தொடங்கியிருப்பதாக, மாவட்டக் காவல்துறை தலைவர் நோர்ஹிசாம் பஹாமான் தெரிவித்தார்.


