கோலா திரங்கானு, ஜூன் 25 - இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் மே 31 வரை மாநிலம் முழுவதும் உள்ள கிழக்கு கடற்கரை ரயில் இணைப்பு (ECRL) திட்ட இடங்களில் கேபிள் திருட்டுகள் உட்பட 22 திருட்டு தொடர்பான புகார்களை திரங்கானு காவல்துறை பதிவு செய்தனர். இதனால் ஏற்பட்ட மொத்த இழப்பின் மதிப்பு RM300,000 ஆகும்.
பெசூட்டில் ஐந்து வழக்குகள், மாராங்கில் நான்கு, சேத்தியுவில் இரண்டு, கெமாமன் மற்றும் டுங்கனில் தலா ஒரு வழக்கு என 13 விசாரணை ஆவணங்கள் திறக்கப்பட்டுள்ளதாக மாநில காவல்துறைத் தலைவர் டத்தோ முகமது கைரி கைருடின் தெரிவித்தார்.
“இவற்றில், ஐந்து வழக்குகள் குற்றவியல் சட்டப் பிரிவுகள் 414 மற்றும் 379/511 இன் கீழ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளன. மேலும், ஐந்து வழக்குகள் ஆதாரங்கள் இல்லாததால் மேல் நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை (NFA) என வகைப்படுத்தப்பட்டன. அதே நேரத்தில் மூன்று இன்னும் விசாரணையில் உள்ளன,” என்று அவர் பெர்னாமாவிடம் கூறினார்.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது வழக்குகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதில் கிட்டத்தட்ட RM2 மில்லியன் இழப்புகள் ஏற்பட்டன.
“அந்த வழக்குகளில், எட்டு வழக்குகள் ஒரே பிரிவுகளின் கீழ் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டன, ஐந்து வழக்குகளுக்கு NFA வழங்கப்பட்டது. மேலும் 10 வழக்குகள் விசாரணையில் உள்ளன,” என்று அவர் மேலும் கூறினார்.
மேலும் இந்த திருட்டைத் தடுக்க பாதுகாப்பை வலுப்படுத்துமாறு திட்ட தள ஆபரேட்டர்களுக்கு முகமட் கைரி அறிவுறுத்தினார்.
— பெர்னாமா


