கோத்தா டமான்சாரா, ஜூன் 23 - சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள பல பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள் கட்டப்படும்.
மக்கள் தொகை அதிகரித்து வரும் பகுதிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, இந்த நடவடிக்கை அவசியம் என்று சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் கூறினார்.
சௌஜானா உத்தாமா இடைநிலைப்பள்ளி, பண்டார் பாரு சுங்கை பூலோ இடைநிலைப்பள்ளி, புக்கிட் காடிங் இடைநிலைப்பள்ளி மற்றும் சியராமஸ் இடைநிலைப்பள்ளி ஆகியவை கூடுதல் வகுப்பறைகளைப் பெறவுள்ளன.
இந்த திட்டம் டெண்டர் செயல்பாட்டில் இருப்பதாகவும், நடைமுறைகளுக்கு இடையூறு ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக செலவை பற்றி வெளியிட இயலாது என்றும் சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினரான ரமணன் கூறினார்.
சிலாங்கூர், கோத்தா டமான்சாராவில் நடைபெற்ற எஸ்.பி.எம் தேர்வில் சிறப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போது தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துணை அமைச்சருமான டத்தோ ஸ்ரீ ரமணன் இவ்வாறு கூறினார்.
பெர்னாமா


