கோலாலம்பூர், ஜூன் 17- கவனக்குறைவான வாகனத்தை செலுத்தி பாதசாரி ஒருவரின் மரணத்திற்குக் காரணமாக இருந்ததாக வங்காளதேசத் தொழிலாளி ஒருவர் மீது இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நேற்று குற்றஞ்சாட்டப்பட்டது.
மாஜிஸ்திரேட் கைருன்னிசாக் ஹஸ்னி முன்னிலையில் தனக்கு எதிராக கொண்டுவரப்பட்டக் குற்றச்சாட்டை 39 வயதான அட்டிக் ஜமான் மறுத்து விசாரணை கோரினார்.
கடந்த ஜூன் 13ஆம் தேதி காலை 11.49 மணியளவில் இங்குள்ள ஜின்ஜாங் நோக்கி செல்லும்செந்துல் தடத்தில் கறுப்பு நிற நிசான் சில்பி ரகக் காரை கவனக்குறைவாக ஓட்டி முஹம்மது ரெட்சுவான் ஜமால் (வயது 46) என்பவருக்கு மரணத்தை ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஐந்து முதல் 10 ஆண்டு வரையிலான சிறைத்தண்டனை, அதிகப்பட்சம் 50,000 வெள்ளி அபராதம் விதிக்க வகை செய்யும் 1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டம் (சட்டம் 333) பிரிவு 41(1) இன் கீழ் அந்த நபர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
மேலும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஐந்து ஆண்டுகளுக்குக் குறையாத காலத்திற்கு ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்கவும் பெறவும் தகுதியற்றவர் என அவர் அறிவிக்கப்படுவார்.
குற்றம் சாட்டப்பட்டவர் மலேசிய குடிமகன் அல்ல என்பதால் அவருக்கு ஜாமீன் வழங்க துணை அரசு வழக்கறிஞர் அடிபா இமான் ஹாசன் பரிந்துரைக்கவில்லை. ஆனால் நீதிமன்றம் ஜாமீன் வழங்கினால் இரண்டு மலேசிய நபர்களின் உத்தரவாதத்துடன் 20,000 வெள்ளிக்கும் குறையாத ஜாமீன் தொகையை நிர்ணயிக்க அவர் முன்மொழிந்தார்.


