மாரான், ஜூன் 16 - ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளான அரச மலேசிய போலீஸ் படையின் 492 அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்களில் 59 பேர் இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று புக்கிட் அமான் உயர்நெறி மற்றும் தரநிலை பின்பற்றுதல் துறை இயக்குநர் டத்தோஸ்ரீ அஸ்ரி அகமது தெரிவித்தார்.
தண்டனை விதிக்கப் பட்டவர்களில் பெரும்பாலோர் போதைப்பொருள் வழக்குகளில் தொடர்புடையவர்கள் எனக் கூறிய அவர், அதனைத் தொடர்ந்து உயர்நெறி, குற்றச்செயல், ஊழல் மற்றும் ஷரியா பிரச்சினைகளில் சம்பந்தப் பட்டுள்ளனர் என்றார்.
நடவடிக்கைக்கு உட்படுத்தப் பட்டவர்களின் புள்ளிவிவரங்களில் 2025 க்கு முந்தைய ஆண்டில் விசாரிக்கப்பட்ட அல்லது செய்யப்பட்ட குற்றங்களும் அடங்கும். அது தவிர, கடந்த ஐந்து மாத காலத்தில், 671 பேர் தடுத்து வைக்கப்பட்டதோடு மேலும் 146 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர் என்று அவர் கூறினார்.
இன்று இங்கு நடைபெற்ற மாரான் மாவட்ட காவல் தலைமையகத்தின் திறப்பு விழாவில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு கூறினார். இந்நிகழ்வில் பகாங் மாநில காவல்துறைத் தலைவர் டத்தோஸ்ரீ யஹாயா ஓத்மான் மற்றும் மாரான் மாவட்ட காவல் துறைத் தலைவர் சூப்ரிண்டெண்டன் வோங் கிம் வாய் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
அதே காலகட்டத்தில், புக்கிட் அமான் உயர்நெறி மற்றும் தரநிலை பின்பற்றல் துறை
பல்வேறு தரப்பினரிடமிருந்து 2,637 புகார்களையும் காவல் துறையினர் நடத்தை விதிகள் தொடர்பான தகவல்களையும் பெற்றுள்ளதாகவும் அஸ்ரி தெரிவித்தார்.
பகிரப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை புள்ளிவிவரங்களின் அடிப்படையில் எந்தவொரு காவல்துறை அதிகாரியும் தவறான நடத்தை அல்லது எந்தவொரு குற்றத்தையும் செய்ததாகக் கண்டறியப்பட்டால் சமரசம் இல்லாமல் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை உங்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறது என்று அவர் கூறினார்.


