NATIONAL

மலேசியாவின் வேலையின்மை விகிதம் குறைந்து வருகிறது

12 ஜூன் 2025, 5:33 PM
மலேசியாவின் வேலையின்மை விகிதம் குறைந்து வருகிறது

புத்ராஜெயா, ஜூன் 12 — மலேசியாவின் வேலையின்மை விகிதம் மார்ச் மாதத்தில் 3.1 சதவீதத்திலிருந்து ஏப்ரல் மாதத்தில் மூன்று சதவீதமாகக் குறைந்துள்ளது. இது 10 ஆண்டுகளில் மிகக் குறைவு என்று புள்ளிவிவரத் துறை வெளியிட்ட ஏப்ரல் 2025க்கான மலேசிய தொழிலாளர் துறையின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

மார்ச் மாதத்தில் 529,600 நபர்களாக இருந்த வேலையற்றோர் எண்ணிக்கை ஏப்ரல் மாதத்தில் 0.7 சதவீதம் குறைந்து 525,900 ஆக உள்ளது என தலைமை புள்ளிவிவர நிபுணர் டத்தோஸ்ரீ முகமது உசிர் மஹிடின் தெரிவித்தார்.

“நாட்டின் பொருளாதார நிலை, மலேசியாவின் தொழிலாளர் படையில் நிலையான முன்னேற்றத்திற்கு பங்களித்துள்ளது. வேலையளிப்பவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு மற்றும் தொழிலாளர்களின்  பங்கேற்பு அதிகம் உள்ளது. அதே நேரத்தில் வேலையின்மை தொடர்ந்து குறைந்து வருகிறது,” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

ஏப்ரல் மாதத்தில் தொழிலாளர்கள் நிலை தொடர்ந்து வளர்ந்து வருவதாகவும், மார்ச் மாதத்தில் 17.31 மில்லியனுடன் ஒப்பிடும்போது 0.2 சதவீதம் அதிகரித்து 17.34 மில்லியனாக உயர்ந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

"இதன் விளைவாக, தொழிலாளர் பங்கேற்பு விகிதம் மார்ச் மாதத்தில் 70.7 சதவீதத்திலிருந்து 0.1 சதவீத புள்ளிகள் அதிகரித்து 70.8 சதவீதமாக உயர்ந்துள்ளது, இது சந்தையில் அதிக தொழிலாளர் பங்கேற்பைக் குறிக்கிறது" என்று அவர் கூறினார்.

பொருளாதாரத் துறையைப் பொறுத்தவரை, சேவைகள் துறை வேலைவாய்ப்பு வளர்ச்சியின் முக்கிய உந்து சக்தியாக உள்ளது. அதில் மொத்த மற்றும் சில்லறை வர்த்தகம், தங்குமிடம், உணவு மற்றும் பான சேவைகள், அத்துடன் போக்குவரத்து மற்றும் சேமிப்பு நடவடிக்கைகள் குறிப்பிடத்தக்கவை.

உற்பத்தி, கட்டுமானம், விவசாயம், சுரங்கம் மற்றும் குவாரி துறைகளிலும் நேர்மறையான போக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

15 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் வேலையின்மை விகிதம் ஏப்ரல் மாதத்தில் 10.3 சதவீதமாக மாறாமல் இருப்பதாகவும், 298.3 ஆயிரம் இளைஞர்கள் வேலையில்லாமல் இருப்பதாகவும் உசிர் கூறினார்.

வலுவான பொருளாதார கொள்கைகள் மற்றும் நிலையான உள்நாட்டு தேவை ஆகியவற்றால் வலுப்படுத்தப்பட்டு, இந்த ஆண்டின் வரும் மாதங்களில் நாட்டின் தொழிலாளர் படை விரிவடையும் என்றும் உசிர் கூறினார்.

"உலகளாவிய புவிசார் அரசியல் பதட்டங்கள் இருந்தபோதிலும், நிலையான வேலையின்மை, வளர்ந்து வரும் சேவைகள் துறை மற்றும் தொழில்நுட்பம், அத்துடன் டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் ஆட்டோமேஷனில் அதிகரித்து வரும் முதலீடு காரணமாக மலேசியாவின் தொழிலாளர்கள் மீள்தன்மை கொண்டு இருப்பது தெரிகிறது," என்று அவர் மேலும் கூறினார்.

— பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.