கோலாலம்பூர், ஜூன் 12 - புக்கிட் ஜாலில் தேசிய அரங்கில் மலேசியா மற்றும் வியட்நாம் இடையே நேற்று தினம் நடைபெற்ற 2027 ஆசியக் கிண்ண தகுதிச் சுற்று கால்பந்து போட்டிக்குப் பிறகு ஏற்பட்ட கைகலப்பில் சம்பந்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஐந்து ஆடவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
பத்தொன்பது முதல் 27 வயதுக்குட்பட்ட அந்த ஐந்து பேரும் இரவு 11.50 மணியளவில் புக்கிட் ஜாலில் தேசிய அரங்கின் 'பி' கார் நிறுத்தும் பகுதியில் கைது செய்யப்பட்டதாக செராஸ் மாவட்ட துணைப் போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் ரிட்சுவான் காலிட் தெரிவித்தார்.
குற்றவியல் சட்டத்தின் 147 வது பிரிவின் கீழ் விசாரணைக்கு உதவுவதற்காக அவர்கள் ஒரு நாள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர். அடுத்தக்கட்ட நடவடிக்கைக்காக விசாரணை அறிக்கை துணை அரசு வழக்கறிஞர் அலுவலகத்திற்கு அனுப்பப்படும் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இச்சம்பவம் குறித்து தகவல் தெரிந்த பொதுமக்கள் 03-9284 5050/5051 என்ற எண்ணில் செராஸ் காவல்துறை ஹாட்லைன், 03-2115 9999 என்ற எண்ணில் கோலாலம்பூர் காவல்துறை ஹாட்லைன் அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறு ரிட்சுவான் கேட்டுக் கொண்டார்.
முன்னதாக, அரங்கிற்கு வெளியே நடந்ததாக நம்பப்படும் கைகலப்பை காவல்துறை அதிகாரிகள் தடுக்க முயற்சிப்பதை சித்தரிக்கும் ஒரு நிமிட காணொளி டிக்டாக் செயலியில் வைரலானது.


