கோலாலம்பூர், ஜூன் 9 - சுல்தான் இட்ரிஸ் கல்விப் பல்கலைக்கழகத்தின்
(உப்ஸி) மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மற்றும் எம்.பி.வி.
வாகனம் சம்பந்தப்பட்ட விபத்தில் பலியான 13 பேரின் உடல்கள்
சவப்பரிசோதனைக்காக ஈப்போ, ராஜா பெர்மைசூரி பைனுன்
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன.
இவ்விபத்தில் பலியான மேலும் இருவரின் உடல்கள் மீது கிரீக்
மருத்துவமனையில் சவப்பரிசோதனை நடத்தப்படும் என உயர்கல்வி
அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜம்ப்ரி அப்துல் காடீர் கூறினார்.
இவ்விபத்தில் காயமடைந்தவர்களும் கிரீக் மருத்துவமனையில் சிகிச்சைப்
பெற்று வருவதாகக் கூறிய அவர், இவ்விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின்
குடும்பத்தினருக்கு தங்கு வசதிகளை ஈப்போ, தெங்கு ஓமார்
போலிடெக்னிக் மற்றும் கிரீக் சமூக கல்லூரி மூலம் ஏற்பாடு
செய்யப்படுவதாக தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரைச் சந்திப்பதற்காக நான் ஈப்போ
சென்று கொண்டிருக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு
உப்ஸி பல்கலைக்கழகமும் அமைச்சும் தேவையான உதவிகளை
வழங்கும். ஹாட்லைன் தொலைபேசி எண்களுடன் கூடிய நடவடிக்கை
அறையை உப்ஸி திறந்துள்ளது என்று அவர் கூறினார்.
இந்த விபத்தில் உப்ஸி உயர்கல்விக் கூடத்தைச் சேர்ந்த 15 மாணவர்கள்
உயிரிழந்ததைதையும் அவர் தனது சமூக ஊடகக் கணக்கில்
உறுதிப்படுத்தினார்.
கிரீக், கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலையின் பானுன், தாசேக் பாண்டிங் அருகே
இன்று விடியற்காலை பேருந்து மற்றும் எம்.பி.வி. வாகனம் சம்பந்தப்பட்ட
விபத்தில் 15 மாணவர்கள் உயிரிழந்தனர்.


