கோலாலம்பூர், மே 30 - செலாயாங் உத்தாராவில் ஆயிரக்கணக்கான சட்டவிரோத குடியேறிகள் தங்கியிருப்பதாக நம்பப்படும் வளாகம் மீது ஓப் காச்சி நடவடிக்கையின் கீழ் அதிகாரிகள் நேற்றிரவு அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
இரவு 10.45 மணிக்கு தொடங்கப்பட்டு இன்று அதிகாலை 6.00 மணியளவில் முடிவடைந்த இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கையில் 225 குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்கள் சோதனை செய்யப்பட்டன.
இந்த நடவடிக்கையில் மொத்தம் 1,435 பேர் சோதனை செய்யப்பட்டதாகப் புக்கிட் அமான் உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் பொது செயல்பாட்டுப் படை துணை இயக்குநர் டத்தோ முகமது சுஸ்ரின் முகமது ரோடி தெரிவித்தார்.
இந்த நடவடிக்கையின் போது மிக அதிகமாக மியான்மர் நாட்டினர் அதாவது 160 சிறார்கள் உள்பட 1,222 பேர் சோதனையிடப்பட்டனர். மீதமுள்ளவர்கள் இந்தியா, நேப்பாளம், வங்காளதேசம் மற்றும் இந்தோனேசிய ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களாவர் என்று அவர் நடவடிக்கைக்குப் பிறகு ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
சோதனை செய்யப்பட்ட பெரும்பாலான வெளிநாட்டினர் செலாயாங் மொத்த விற்பனை சந்தை மற்றும் அருகிலுள்ள வணிக வளாகங்களில் பணிபுரிந்ததாக முகமது சுஸ்ரின் தெரிவித்தார்.
இந்த சோதனையின் போது ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர் ஆணையத்தின் அட்டைகளை வைத்திருப்பதாக சில சட்டவிரோதக் குடியேறிகள் கூறிக்கொண்டதாகவும் எனினும், சம்பந்தப்பட்ட அட்டைகளின் நம்பகத்தன்மையை அடையாளம் காண அவர்கள் குடிநுழைவுத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மலேசிய குடிநுழைவுத் துறை, எரிசக்தி ஆணையம், தேசிய நீர் சேவைகள் ஆணையம் (ஸ்பான்) மற்றும் கோலாலம்பூர் மாநகர் மன்றம் ஆகியவற்றால் அமல்படுத்தப்பட்ட சட்டத்தின் கீழ் பல்வேறு குற்றங்கள் அடையாளம் காணப்பட்டதாகவும் அவர் கூறினார்.
அனுமதிக்கப்பட்ட காலத்தை விட அதிகமாக தங்கியது, செல்லுபடியாகும் பயண ஆவணங்கள் இல்லாதது, மின்சார மீட்டர்களை மாற்றியமைத்தல், சட்டவிரோதமாக நீர் இணைப்பு மற்றும் உரிமம் இல்லாமல் வணிகம் நடத்துதல் ஆகியவை அடையாளம் காணப்பட்ட குற்றங்களில் அடங்கும் என்றார் அவர்.


