புத்ராஜெயா, மே 27- வேப் எனப்படும் மின் சிகிரெட் விற்பனையைத் தடை
செய்வது தொடர்பில் சிலாங்கூர் அரசு அடுத்த வாரம் இறுதி முடிவை
எடுக்கும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின்
இந்த வாரம் அல்லது அடுத்த வாரம் மாநில அரசு ஆட்சிக்குழு கூட்டத்தில்
தாக்கல் செய்யவிருக்கும் பரிந்துரை அறிக்கையின் அடிப்படையில் இது
குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அவர் சொன்னார்.
மாநில ஆட்சிக்குழுக் கூட்டத்தில் சமர்ப்பிப்பதற்காக சுகாதாரத் துறைக்கான
ஆட்சிக்குழு உறுப்பினர் தற்போது அந்த அறிக்கையைத் தயாரிக்கும்
பணியில் ஈடுபட்டுள்ளார். கிடைக்கபெறும் தரவுகளின் அடிப்படையில் இந்த
வாரம் அல்லது அடுத்த வாரம் இதன் தொடர்பில் இறுதி முடிவினை
நாங்கள் எடுப்போம் என்று அவர் குறிப்பிட்டார்.
டிஜிட்டல் மற்றும் எல்.இ.டி. உள்பட வேப் தொடர்பான அனைத்து
வடிவங்களிலான விளம்பரங்களையும் பறிமுதல் செய்து அகற்றும்படி
மாநிலத்திலுள்ள அனைத்து ஊராட்சி மன்றங்களுக்கும் மாநில அரசு
உத்தரவிட்டிருந்தது.
கவலையளிக்கும் வகையில் அதிகரித்து வரும் வேப் அச்சுறுத்தலிலிருந்து
இளம் தலைமுறையினரைக் காக்கும் நோக்கில் 2023ஆம் ஆண்டு பொது
சுகாதாரத்திற்கான புகையிலைப் பொருள் கட்டுப்பாட்டுச் சட்டத்திற்கு
(சட்டம் 852) ஏற்ப இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஜமாலியா
தெரிவித்திருந்தார்.
இந்த வேப் விற்பனைக்கான தடையை முன்னதாகவே அமல்படுத்திய
மாநிலங்களாக திரங்கானுவும் ஜோகூரும் விளங்குகின்றன. திரங்கானு
மாநிலம் கடந்த 2016ஆம் ஆண்டு ஆகஸ்டு 1ஆம் தேதி முதல் இந்த
தடையை அமல்படுத்தி வருகிறது.


