ஷா ஆலம், மே 19 - வேப் எனப்படும் மின் சிகிரெட் பொருள்களை தடை
செய்வது தொடர்பில் சிலாங்கூர் மாநில அரசு இன்னும் இரு மாதங்களில்
இறுதி முடிவை எடுக்கும்.
தற்போதைக்கு சுகாதார அமைச்சு, மாநில சுகாதாரத் துறை மற்றும்
ஊராட்சி மன்றங்களை உள்ளடக்கிய இரு கூட்டங்களை தாங்கள்
நடத்தியுள்ளதாகப் பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் துறைக்கான
ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் கூறினார்.
தடை அமலாக்கத்தை நோக்கி நாங்கள் சென்று கொண்டிருக்கிறோம்.
எனினும், எங்கள் அணுகுமுறை எச்சரிகையாகவும் விரிவானதாகவும்
இருக்க வேண்டும் என்று அவர் சொன்னார்.
இங்குள்ள கான்கார்ட் ஹோட்டலில் சிலாங்கூர் பருவநிலை தழுவல்
மையத்தை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர்
இதனைத் தெரிவித்தார்.
பரவலாக காணப்படும் இணைய விற்பனை, ஒருமுகப்படுத்தப்படாத
மற்றும் அடையாளம் தெரியாத பிராண்டுகள், வீடுகளில்
மேற்கொள்ளப்படும் சட்டப்பூர்வமற்ற தயாரிப்பு உள்ளிட்ட சவால்கள்
குறித்து இந்த சந்திப்புக் கூட்டங்களில் விரிவாக விவாதிக்கப்பட்டது என்று
அவர் குறிப்பிட்டார்.
வேப் மற்றும் மின் சிகிரெட் பொருள்களின் விற்பனைக்கு எதிராக தடை
விதிக்கும் பரிந்துரை வரும் மாநில சட்டமன்றக் கூட்டத்தில்
பரிந்துரைக்கப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி
முன்னதாக கூறியிருந்தார்.
அதிகமானோர் மின் சிகிரெட்டுகளுக்கு மாறி வருவதால் அந்து மிகப்
பெரிய பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. இதனைக் கட்டுபடுத்துவதற்கான விதிமுறைகளை உருவாக்குவதற்கு நமக்கு வலுவான ஒருங்கிணைப்பு தேவைப்படுகிறது என அவர் சொன்னார்.


