பாங்காக், மே 18 -- தாய்லாந்து பொது பூப்பந்துப் போட்டியில் மலேசிய மகளிர் இரட்டையர் பிரிவு விளையாட்டாளர்களான பேர்லி டான்-எம். தினா ஜோடி, ஜப்பானின் ருய் ஹிரோகாமி-சயாகா ஹோபரா ஜோடியை 21-18, 21-12 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தேர்வு பெற்றது.
உலகின் நான்காவது இடத்தில் உள்ள அந்த ஜோடி ஜப்பானிய ஜோடியை வீழ்த்த வெறும் 45 நிமிடங்கள் மட்டுமே எடுத்துக் கொண்டனர்.
முன்னதாக மற்றொரு அரையிறுதிப் போட்டியில் தைவானின் ஹ்சு யா சிங்-சங் யூ ஹ்சுவானை 21-17, 21-19 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்திய தென் கொரியாவின் ஜியோங் நா யூன்-லீ இயோன் வூ ஜோடியை இவர்கள் இறுதியாட்டத்தில் எதிர்கொள்கின்றனர்
எதிராளிகள் எதிர்பாராத விதமான தாக்குதல் காரணமாக சற்று பதட்டமான நிலையில் ஆட்டத்தை தொடக்கியதை தினா ஒப்புக்கொண்டார்.
முதல் ஆட்ட இடை வேளையின் போது எங்கள் பயிற்சியாளர்கள் வழங்கிய சில ஆலோசனைகளுக்குப் பிறகு நாங்கள் எங்கள் சொந்த உத்தியில் ஆட்டத்தை தொடர்வதில் கவனம் செலுத்தினோம். அது போட்டியின் கட்டுப்பாட்டை மீண்டும் கொண்டுவர எங்களுக்கு உதவியது என்று அவர் பெர்னாமாவிடம் கூறினார் .
இதற்கிடையில், தொடக்கச் சிக்கல்களைத் தீர்த்த பிறகு எதிரிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் தங்களின் முடிவு நல்ல பயனைத் தந்தது என்று பேர்லி கூறினார்.
எங்கள் சுழற்சி மற்றும் தாக்குதல் வியூகம் நன்றாக வேலை செய்தது. இதனால் எங்கள் எதிர் ஆட்டக்காரர்களுக்கு நிறைய பிரச்சனைகள் ஏற்பட்டன. நாளை தென் கொரியர்களுக்கு எதிரான இறுதிப் போட்டியிலும் இந்த உத்வேகத்தைத் தக்க வைத்துக் கொள்வோம் என்று நம்புகிறோம் என்று அவர் கூறினார்.


