ஷா ஆலம், மே 14 - லீமாஸ் எனப்படும் பௌத்த, கிறிஸ்தவ, இந்து, சீக்கிய மற்றும் தாவோயிஸ்ட் சிறப்பு செயல்குழுவின் வாயிலாக சிலாங்கூரில் பல்வேறு மதங்களைப் பின்பற்றுபவர்கள் மத்தியில் நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் வலுப்படுத்தும் முயற்சிகளை சிலாங்கூர் மாநில அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் லீமாஸ் செயல்குழுவின் இவ்வாண்டிற்கான இரண்டாவது கூட்டம் அதன் இணைத் தலைவரும் முதலீட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினருமான இங் ஸீ ஹான் தலைமையில் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆடசிக்கு உறுப்பினரும் லீமாஸ் இணைத் தலைவருமான வீ.பாப்பாராய்டு, செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் ஜோர்ஜ், புக்கிட் லஞ்சான் சட்டமன்ற உறுப்பினர் உட்பட பல மக்கள் பிரதிநிகள் கலந்து கொண்டனர்.
பல்லின சமயங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் எப்போதும் பராமரிக்கப்படுவதை உறுதி செய்வதற்கு ஏதுவாக அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் பரிந்துரைகளையும் செவிமடுக்கும் மாநில அரசின் உறுதிப்பாட்டை இந்த கூட்டம் பிரதிபலிக்கிறது.
மேலும் மாவட்ட நில அலுவலகம், சிலாங்கூர் நிலம் மற்றும் சுரங்க இயக்குநர் அலுவலகம், சிலாங்கூர் பொதுப்பணித் துறை, சிலாங்கூர் நகர மற்றும் கிராம திட்டமிடல் துறை, சிலாங்கூர் நீர் மேலாண்மை வாரியம் (லுவாஸ்) மற்றும் சிலாங்கூர் தேசிய ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்புத் துறை உள்ளிட்ட பல்வேறு அரசு நிறுவனங்களின் பிரதிநிகளும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
மலேசிய இந்து சங்கம், மலேசிய குருத்வாராக்கள் மன்றம், மலேசிய இந்துதர்ம மாமன்றம், மலேசிய புத்த மிஷனரி சங்கம், மலேசிய கிறிஸ்துவ கூட்டமைப்பு, மலேசிய புத்த சங்கம் கே எல்./சிலாங்கூர் மற்றும் மலேசிய ஃபோ குவாங் புத்த சங்கம் போன்ற மத அமைப்புகளின் பிரதிநிதிகளும் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.
சிலாங்கூரில் உள்ள முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்களின் நலன்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்கும் அதிகாரிகள், சமய அமைப்புகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையே ஒத்துழைப்பை ஊக்குவிப்பதில் இந்தக் கூட்டம் ஒரு முக்கியமான தளமாக செயல்படுகிறது.
மாநில மக்களிடையே நீண்ட காலமாக நிலவிவரும் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தின் பாரம்பரியத்தைத் தொடர இந்த அணுகுமுறை பெரிதும் துணை புரியும் என நம்பப்படுகிறது.


