கோலாலம்பூர், மே 10- மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்.ஏ.சி.சி.) தலைவர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கியின் பதவிகாலம் மேலும் ஓராண்டிற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அவரின் இந்த நியமனம் இம்மாதம 13ஆம் தேதி அமலுக்கு வருகிறது.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தில் உயர் பொறுப்பை வகிக்கும் அஸாம் பாக்கியின் பதவி காலத்தை மேலும் ஓராண்டிற்கு நீட்டிக்க மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான் இப்ராஹிம் ஒப்புதல் அளித்துள்ளதாக அரசாங்க தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ சம்சுல் அஸ்ரி அபு பாக்கார் கூறினார்.
துணை விதி 5(1) மற்றும் 2009ஆம் ஆண்டு எம்.ஏ.சி.சி. சட்டத்திற்கு ஏற்ப எம்.ஏ.சி.சி. ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கியின் பதவி காலத்தை 2025 மே 13 முதல் 2026 மே 12 வரை மேலும் ஓராண்டிற்கு நீட்டிக்க மாட்சிமை தங்கிய பேரரசர் ஒப்புதல் அளித்துள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
எம்.ஏ.சி.சி.க்கு தலைமையேற்றது முதல் அவர் காட்டி வரும் ஈடுபாடு, அனுபவம் மற்றும் அடைவுநிலையைக் கருத்தில் கொண்டு இந்த நியமனம் செய்யப்படுகிறது என்று சம்சுல் குறிப்பிட்டார்.
அறுபத்திரண்டு வயதான அஸாம் பாக்கியின் பதவி காலம் ஏற்கனவே இரு முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. 2009ஆம் ஆண்டு எம்.ஏ.சி.சி. சட்டத்தின் 5(3) பிரிவுக்கு ஏற்ப தனது பணி ஒப்பந்த காலத்தை சுருக்கிக் கொள்ள எம்.ஏ.சி.சி. ஆணையர் லத்திபா கோயா முடிவெடுத்ததைத் தொடர்ந்து அந்த ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவராக அஸாம் பாக்கி கடந்த 2020 மார்ச் 9ஆம் தேதி நியமிக்கப்பட்டார்.
நாட்டில் சட்ட அமலாக்கத்தை வலுவாக கடைபிடிப்பதிலும் ஊழலை ஒழிப்பதிலும் மிகவும் பிரசித்தி பெற்ற நபராக அஸாம் பாக்கி விளங்கி வருகிறார்.


