ஜெர்த்தே, மே 9: சமூக ஊடகங்களில் ஓய்வு தேதிகளை அறிவிப்பது, தனிமையை வெளிப்படுத்துவது போன்ற செயல்கள் மோசடி கும்பலின் இலக்காக ஆசிரியர்கள் மாறுவதற்கு பெரும்பாலும் காரணமாக அமைகின்றன.
ஆசிரியர்களின் இத்தகையச் செயல்களை மோசடி தரப்பினர் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்த முயற்சிப்பார்கள் என்று திரங்கானு மாநில கல்வி துணை இயக்குநர் கம்சா @ கமால் முகமது கூறினார்.
ஆசிரியர்களின் இது போன்ற நடவடிக்கைகள் மோசடி செய்பவர்களுக்கு எளிதான இலக்காக மாறுவதோடு அவர்கள் பல்வேறு தந்திரங்களைப் பயன்படுத்தி ஏமாற்றுகின்றனர் என அவர் சொன்னார்.
ஆசிரியர்கள் அல்லது ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மத்தியில் இத்தகைய மோசடியில் பாதிக்கப்படும் பல சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்றும் அவர் கூறினார்.
காதல் மோசடி, மின் வணிக குற்றங்கள், இல்லாத கடன்கள் அல்லது இல்லாத முதலீடுகள் என பல்வேறு வழிகளில் ஏமாற்றும் இணையக் குற்றவாளிகளின் இலக்குகளாக ஆசிரியர்கள் உள்ளனர்.
கடந்த 2023 ஜனவரி முதல் 2025 ஏப்ரல் வரையிலான காலக்கட்டத்தில் அரச மலேசிய போலீஸ் படையின் இணையக் குற்றப் பிரிவிற்கான தரவுகளின்படி மொத்தம் 609 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 1 கோடியே 35 லட்சம் வெள்ளி இழப்புகள் ஏற்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில் பலர் ஆசிரியர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்கள் உள்ளதாக புரிந்து கொள்ளப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
இன்று இங்குள்ள தெங்கு மாமுட் தேசியப் பள்ளியில் தேசிய மோசடி மறுமொழி மையம் ஏற்பாடு செய்த இணைய நிதி குற்றத் தடுப்பு நிகழ்வில் உரையாற்றும் போது அவர் இதனைக் கூறினார்.
இதுபோன்ற பிரச்சாரங்கள் கல்வியாளர்களுக்கு வழிகாட்டுதலையும் எச்சரிக்கைகளையும் வழங்கும் என்று நம்புகிறோம். இதன் வழி இத்தகைய அச்சுறுத்தலை முற்றிலுமாக நிறுத்த முடியும் என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.


