கோல லங்காட், மே 9 - நீண்ட காலமாக வீடுகளுக்கான பட்டா பெறுவதில்
சிரமத்தை எதிர்நோக்கி வரும் கோம்பாக், பங்சாபுரி பெர்மாய்
குடியிருப்பைச் சேர்ந்த 500 உரிமையாளர்கள் கூடிய விரைவில் பட்டா
பெறுவதற்கான தொடக்க உதவியைப் பெறுவர்.
இவ்வாண்டு அறிமுகப்படுத்தப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு பட்டா
விவகாரத் தீர்வு நிதியின் வாயிலாக உதவி பெறும் முதல் குழுவினராக
இந்த குடியிருப்பாளர்கள் விளங்குவதாக வீடமைப்புத் துறைக்கான
ஆட்சிக்குழு உறுப்பினர் கூறினார்.
இதே போன்றப் பிரச்சினையை எதிர்நோக்கியுள்ள மேலும் 10,000
குடியிருப்பாளர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் இவ்வாண்டு முழுவதும் உதவி
வழங்கப்பட்டுள்ளதாகப் பொர்ஹான் அமான் ஷா தெரிவித்தார்.
ஒட்டுமொத்தமாக 138,000 வீடுகள் சொத்துரிமைப் பிரச்சனையை
எதிர்நோக்கியுள்ளன. பல ஆண்டுகளாக நீடித்து வரும் இப்பிரச்சினைக்குத்
தீர்வு காணும் நோக்கில் ஒரு கோடி வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளோம்
என்று அவர் சொன்னார்.
சொத்துரிமைப் பிரச்சனை ஏறக்குறைய முடிவுக்கு வரும் தறுவாயில்
உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு இந்த திட்டத்தில் முன்னுரிமை
அளிக்கப்படும். சில குடியிருப்புகள் எதிர்நோக்கும் சிக்கல்களுக்கு 70 முதல்
80 விழுக்காடு வரை தீர்வு காணப்பட்டு விட்டது என்றார் அவர்.
பெர்மோடலான் நெகிரி சிலாங்கூர் பெர்ஹாட் மற்றும் மலேசிய ஊழல்
தடுப்பு ஆணையத்தின் ஏற்பாட்டில் இங்குள்ள கம்போங் எண்டாவில்
நடைபெற்ற சமூக நிகழ்வொன்றில் கலந்து கொண்டப் பின்னர்
செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
அடுக்குமாடி குடியிருப்பாளர்கள் எதிர்நோக்கும் வீட்டு மனைப் பட்டா
விவகாரத்திற்கு தீர்வு காண ஒரு கோடி வெள்ளி ஒதுக்கீடு செய்யப்படுவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி 2025ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்த போது கூறியிருந்தார்.


