கோலாலம்பூர், மே 8 - மெனாரா கோலாலம்பூர் ஊழியர் விவகாரம் தொடர்பாக இன மற்றும் சமய உணர்வுகளை புண்படுத்தும் வகையிலான உள்ளடக்கத்தை டிக்டோக் செயலியில் பதிவேற்றியதற்காக ஒருவருக்கு 10,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.
தேசிய சட்டத் துறைத் தலைவரிடமிருந்து அனுமதியைப் பெற்ற பிறகு முகமது ஷாபிக் அப்துல் ஹலிம் என்ற அந்த ஆடவருக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டதாக மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (எம்.சி.எம்.சி.) நேற்று ஓர் அறிக்கையில்
தெரிவித்தது.
இதன் தொடர்பில் 1998 ஆம் ஆண்டு தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின் (சட்டம் 588) 233வது பிரிவின் கீழ் விசாரணை நடத்தப்பட்டது.
ஆபாசமான, அநாகரீகமான, பொய்யான, அச்சுறுத்தும் அல்லது மிகவும் புண்படுத்தும் வகையிலான உள்ளடக்கத்தைப் பரப்புவதற்காக இணைய வசதிகள், இணையச் சேவைகள் அல்லது பயன்பாட்டு சேவைகளைப் பயன்படுத்துவதை இந்த சட்டப்பிரிவு தடை செய்கிறது.
அனைத்து சமூக ஊடக பயனர்களும் உள்ளடக்கங்களைப் பதிவேற்றுவதிலும் அல்லது பகிர்வதிலும் எப்போதும் பொறுப்புடனும் நெறிமுறையுடனும் இருக்க வேண்டும். குறிப்பாக சமயம், இனம் அல்லது அரச அமைப்புகளின் உணர்வுகளைப் பாதிக்கக்கூடிய உள்ளடக்கத்தைப் பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எம்.சி.எம்.சி. எச்சரித்தது.
மலேசியாவில் தேசிய ஒற்றுமை மற்றும் பல இன சமூகத்தின் நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் முயற்சிகளுக்கு ஏற்ப, நாட்டின் இணைய ஊடகம் பாதுகாப்பாகவும் ஒழுங்காகவும் இணக்கமாகவும் இருப்பதை உறுதி செய்வதற்கான தனது உறுதிப்பாட்டையும் எம்.சி.எம்.சி. வெளிப்படுத்தியது.


