ஷா ஆலம். மே 7- துரித வளர்ச்சி காணும் மாநிலமாக சிலாங்கூர்
விளங்கிய போதிலும் அதன் 31.7 விழுக்காட்டுப் பகுதி பாதுகாக்கப்பட்ட
நிரந்த வனப்பகுதியாக தொடர்ந்து நிலை நிறுத்தப்பட்டு வருகிறது.
பொருளாதார வளர்ச்சி, உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் வனப்பாதுகாப்பு
ஆகியவற்றை சீராக மேற்கொள்ள முடியும் என்பதை இதன் வழி
சிலாங்கூர் தொடர்ந்து நிரூபித்து வருகிறது என்று மந்திரி புசார்
டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
வலுவான கொள்கை அடித்தளம், மாநில அரசு மற்றும் அரச
தலைமைத்துவத்தின் ஆதரவின் வாயிலாக நாம் மாநிலத்தின்
நிலப்பகுதியில் 31.7 விழுக்காட்டுப் பகுதியை பாதுகாக்கப்பட்ட நிரந்தர
வனப்பகுதியாக நிலை நிறுத்தி வருகிறோம் என்று அவர் சொன்னார்.
மொத்தம் 108,000 ஹெக்டர் நிலப்பகுதியை சிலாங்கூர் அரச பாரம்பரிய
வனப்பகுதியாக மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான்
பிரகடனப்படுத்தியுள்ளார். வளர்ச்சியை தழுவும் அதே வேளையில்
சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நீண்ட காலத் திட்டத்தை இது
பிரதிபலிக்கிறது என்று அவர் தெரிவித்தார்.
ஜப்பான் நாட்டின் கன்சாயில் நடைபெறும் 2025 ஒசாகா கண்காட்சியை
முன்னிட்டு பெவிலியன் மலேசியாவில் ஏற்பாடு செய்யப்பட்ட சிலாங்கூர்
வார கண்காட்சியில் இடம் பெற்ற பாதுகாக்கபட்ட வனப்பகுதி தொடர்பான
ஆவணப்பட வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்ட போது அவர்
இதனைக் கூறினார்.
சிலாங்கூர் மாநிலத்தின் மழைக்காடுகளின் பெருமை மற்றும் நீடித்த
வளர்ச்சிக்காக அது அளித்து வரும் அளப்பரிய கடப்பாட்டை பாராட்டும்
விதமாக இந்த ஆவணப்படம் அமைந்துள்ளது என்று அமிருடின்
சொன்னார்.
மாநிலத்தின் வளர்ச்சி நகரமய சாதனைகளை மட்டுமல்ல, மாறாக
எதிர்கால தலைமுறைக்காக சுற்றுச்சூழலை நாம் பாதுகாக்க வேண்டியன்
அவசியத்தையும் அந்த ஆவணப்படம் நினைவூட்டுகிறது என்று அவர்
குறிப்பிட்டார்


