ஹெமில்டன், மே 6 - காஸாவில் ஆக்கிரமிப்பை விரிவுபடுத்துவதற்கு
இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாக வெளிவந்த தகவல் குறித்து அச்சம்
தெரிவித்த ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா.) தலைமைச் செயலாளர்
அந்தோணியோ குட்ரெர்ஸ், இத்தகைய செயல் மேலும் அதிகமான
உயிரிழப்புகளுக்கும் அழிவுக்கும் வழி வகுக்கும் என எச்சரித்தார்.
தரை மார்க்க நடவடிக்கைகளை விரிவுபடுத்தவும் காஸாவில்
இராணுவத்தின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் இஸ்ரேல்
திட்டமிட்டுள்ளதாக வெளிவந்த தகவல் குறித்து ஐ..நா. தலைமைச்
செயலாளர் கவலை தெரிவித்துள்ளார் என அவரது பேச்சாளர் இங்கு
நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
இஸ்ரேலின் இந்த நடவடிக்கை மேலும் அதிகமானோர் உயிரிழப்பதற்கும்
காஸாவில் பேரழிவு மோசமடைவதற்கும் வழி வகுக்கும். தற்போதைய
தேவை என்னவென்றால் வன்முறையைத் தடுப்பதே தவிர
உயிரிழப்புகளையும் பேரிழிவுகளையும் அதிகரிப்பது அல்ல என்று அவர்
சொன்னார்.
காஸா பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியாக இருப்பதோடு எதிர்காலத்திலும்
இருக்க வேண்டும் எனக் கூறிய அவர், நீடித்த மற்றும் உடனடி போர்
நிறுத்தம் அமல்படுத்தப்பட வேண்டும் மற்றும் அனைத்து கைதிகளும்
விடுவிக்கப்பட வேண்டும் என்ற அந்தோணியோவின் கோரிக்கையையும்
நினைவூட்டினார்.
காஸா மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும்
போரை விரிவுபடுத்தும் திட்டத்திற்கு இஸ்ரேலிய அமைச்சரவை ஒப்புதல்
வழங்கியிருந்தது.
கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் காஸா மீது போர்
தொடுத்ததிலிருந்து இது வரை 52,000 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.


