ஷா ஆலாம், மே 6 - தற்போது மலேசியாவில் AI அதிநவீனத் தொழில்நுட்ப துறையில் பொறியியலாளர்கள் மற்றும் நிபுணர்கள் 10,000 பேர் தேவைப்படுகின்றனர்.
இப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதில், AI தொழில்நுட்ப மேம்பாடு நாட்டின் முக்கியத் தேவையாகியிருப்பதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
இதற்கு முன் தாக்கத்தை ஏற்படுத்திய தொழில் புரட்சி, கணினி புரட்சி போன்று இப்போது AI-யும் நாட்டின் மேம்பாட்டில் முக்கியப் பங்கு வகிப்பதாக அவர் சொன்னார்.
இருப்பினும், AI அணுகுமுறையானது வெறும் தொழில்நுட்ப அம்சங்கள் சார்ந்தது அல்ல; மாறாக நமது பண்புநலன்கள், வரலாறு, கலாச்சாரம் ஆகியவற்றையும் அது பிரதிபலிக்க வேண்டும்.
இந்நாட்டில் தொழில்நுட்ப வளர்ச்சி, அதன் அடையாளத்தையும் மனிதப் பண்புகளையும் இழக்காமல் இருக்க இது முக்கியம் என, டத்தோ ஸ்ரீ அன்வார் சொன்னார்.
"அரசு அல்லது தனியார் பல்கலைக்கழகங்கள் எதுவாக இருந்தாலும், பங்களிப்புகளையும் நிபுணத்துவத்தையும் ஏற்றுக்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும். இந்தத் துறையை வளர்ப்பதில் தரம் முக்கியமானது," என்று அவர் கூறினார்.
MSU தனியார் பல்கலைக்கழகத்தில் Temu Anwar கலந்துரையாடலில் கலந்துகொண்டு பேசிய போது பிரதமர் இவ்வாறு கூறினார்


