உலு திரங்கானு, மே 2 - LPT2 எனப்படும் இரண்டாவது கிழக்குக் கரை நெடுஞ்சாலையில் 4 சக்கர வாகனம் மோதி கருஞ்சிறுத்தை ஒன்று இறந்துபோனது. நேற்று அதிகாலை 1 மணியளவில் 387-ஆவது கிலோ மீட்டரில் அச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நெடுஞ்சாலையைக் கடக்கும் போது கருஞ்சிறுத்தை மோதப்பட்டுள்ளது என, உலு திரங்கானு காவல்துறை தலைவர் சூப்ரிடென்டண்ட் ஷாருடி அப்துல் வஹாப் தெரிவித்தார்.
மேலும், கருஞ்சிறுத்தை திடீரென குறுக்கிட்டதால், கிளந்தானிலிருந்து கெமாமான் சென்று கொண்டிருந்த காரோட்டியான 19 வயது இளைஞரால், அதனை மோதுவதைத் தவிர்க்க இயலவில்லை.
எனினும் இச்சம்பவத்தால் அந்த ஓட்டுநருக்கு காயமேதும் ஏற்படவில்லை.
கருஞ்சிறுத்தையின் சடலம் மேல் நடவடிக்கைக்காக வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தேசியப் பூங்காக்கள் துறையிடம் (PERHILITAN) ஒப்படைக்கப்பட்டது


