அலோர்ஸ்டார், ஏப்.30 - இங்குள்ள குடியிருப்பு பகுதி ஒன்றிலுள்ள வீட்டில்
கடந்த திங்கள்கிழமை போலீசார் மேற்கொண்ட அதிரடிச் சோதனையில
ஒரு தம்பதியர் கைது செய்யப்பட்டதோடு அவர்களிடமிருந்து 189,000
வெள்ளி மதிப்புள்ள பல்வேறு வகையான போதைப் பொருள்களும்
கைப்பற்றப்பட்டன.
மாலை 3.00 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட இச்சோதனையில் ஐம்பது
வயது மதிக்கத்தக்க அவ்விருவரும் கைது செய்யப்பட்டதாக அலோர்ஸ்டார் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சித்தி நோர் சலாவத்தி சஹாட் கூறினார்.
இந்த சோதனையில 2,846.29 கிராம் எடையுள்ள 10,340 ஹெர்மின் 5
போதை மாத்திரைகள், கெத்தமின் என சந்தேகிக்கப்படும் 493.23 கிராம்
போதைப் பொருள் அடங்கிய பிளாஸ்டிக் பொட்டலம் மற்றும் 364.2 கிராம்
எம்.டி.எம்.ஏ. போதைப் பொருள் ஆகியவை கைப்பற்றப்பட்டன என்று
இன்று இங்கு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.
மேலும், போதைப் பொருள் விற்பனையின் மூலம் பெறப்பட்டதாக
நம்பப்படும் 530 வெள்ளி ரொக்கத்தையும் தாங்கள் கைப்பற்றியதாக அவர்
சொன்னார்.
கெடா மாநிலத்திற்கு வெளியிலிருந்து பெறப்பட்டதாக நம்பப்படும் இந்த
போதைப் பொருளை 3,200 போதைப் பித்தர்களுக்கு விநியோகிக்க முடியும்
என்று அவர் குறிப்பிட்டார்.
கைது செய்யப்பட்ட ஆடவருக்கு எதிரான சிறுநீர் சோதனையில் அவர்
போதைப் பொருளைப் பயன்படுத்தியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதோடு
ஐந்து முந்தையக் குற்றப்பதிகளையும் கொண்டுள்ளார் என்றா அவர்.
இத்தம்பதியர் கடந்த நான்கு ஆண்டுகளாக இவ்வட்டாரத்திலுள்ள சிறு
விநியோகிப்பாளர்களுக்கு விநியோகித்து வந்துள்ளனர். அவ்விருவரும் 1952ஆம் ஆண்டு அபாயகர போதைப்பொருள் சட்டத்தின் 39பி பிரிவின் கீழ் விசாரணைக்காக எதிர்வரும் மே 1ஆம் தேதி வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.


