கோல லங்காட், ஏப். 29 - சுபாங் ஜெயா, புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 150க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு மாநில அரசு இதுவரை மூன்று மாத வீட்டு வாடகை உதவியை வழங்கியுள்ளது.
மாதம் 2,000 வெள்ளியை உள்ளடக்கிய இந்த உதவித் தொகை சிலாங்கூர் வீடமைப்பு மற்றும் சொத்துடைமை வாரியத்தால் (எல்.பி.எச்.எஸ்.) பாதிக்கப்பட்டவர்களின் வங்கிக கணக்குகளில் நேரடியாகச் சேர்க்கப்பட்டதாக வீடமைப்பு மற்றும் கலாச்சாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ போர்ஹான் அமான் ஷா கூறினார்.
பாதிக்கப்பட்ட 70 குடும்பங்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த வாடகைத் தொகையைப் பெற்றதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது. மேலும் புதுப்பிக்கப்பட்ட சமீபத்திய தரவு, எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருப்பதைக் காட்டுகிறது. மொத்தம் 150 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இதுவரை வாடகை உதவியைப் பெற்றுள்ளன.
இந்த உதவி நேரடியாக அவர்களின் கணக்குகளில் வரவு வைக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்பதே மந்திரி பெசாரின் அறிவுறுத்தலாகும். மூன்று மாதத்திற்கான வாடகை உதவி அதாவது 6,000 வெள்ளி நேரடியாக வழங்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
இன்று குவைசைட் மாலில் நடைபெற்ற கோல லங்காட்டில் நவீன மின்சுடலை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு கூறினார்.
வீட்டின் கட்டுமானம் குறித்து கருத்து தெரிவித்த போர்ஹான், இத்திட்டம் இன்னும் விவாதத்தில் இருப்பதாகவும் இது குறித்து டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி விரைவில் அறிவிப்பார் என்றும் கூறினார்.
புதிய கட்டுமானத்தைப் பொறுத்தவரை, மந்திரி பெசார் அது குறித்து அறிவிப்பார். அது இன்னும் விவாதத்தில் உள்ளது. ஏனெனில் வீடுகளுக்கான பாதிப்பைப் பொறுத்தவரை பல பிரிவுகள் உள்ளன. சிறிய சேதமாக இருந்தாலும் அவை முழுமையாக ஆய்வு செய்யப்பட வேண்டும் என்றார் அவர்.
இதன் தொடர்பில் மந்திரி புசார் வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சு மற்றும் தொடர்புடைய நிறுவனங்களுடன் விவாதித்து வருகிறார் என்று அவர் மேலும் கூறினார்.


