கோலாலம்பூர், ஏப்ரல் 25 - 2025-ஆம் ஆண்டு Semarak Membaca புத்தக பற்றுச்சீட்டு திட்டத்திற்காக அரசாங்கம் 10 லட்சம் ரிங்கிட் ஒதுக்கீட்டை அறிவித்துள்ளது. வாசிப்பு கலாச்சாரத்தை மேம்படுத்துவதோடு நாட்டின் புத்தக தொழில்துறையை ஆதரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஏப்ரல் 22-ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 31-ஆம் தேதி வரையில், மாநில புத்தகக் கண்காட்சி அல்லது Shopee தளத்தில் குறைந்தது 20 ரிங்கிட் விலையிலான உள்நாட்டில் வெளியிடப்பட்ட புத்தகங்களை வாங்கும்போது 10 ரிங்கிட் பற்றுச்சீட்டைப் பயன்படுத்தலாம் என்று தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் டத்தோ ஏரன் அகோ டாகாங் தெரிவித்தார்.
புத்தக பற்றுச்சீட்டுகளை வழங்குவதால், வாசிப்பு சாதனங்களை வாங்கும் சுமையைக் குறைப்பதோடு உள்நாட்டுச் செலவினங்களை ஊக்குவிப்பதன் மூலம் உள்ளூர் புத்தகத் தொழில்துறையையும் மேம்படுத்த முடியும் என்றும் வெளியிட்ட ஓர் அறிக்கையில் டத்தோ ஏரன் அகோ டாகாங் குறிப்பிட்டிருந்தார்.
ஒவ்வொரு நபரும் ஒரு முறை மட்டுமே அந்த புத்தகப் பற்றுச்சீட்டைப் பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டது.
புத்தகக் கண்காட்சி நடைபெறும் இடம் மற்றும் புத்தகப் பற்றுச்சீட்டைப் பெறுவது தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு பொதுமக்கள் www.semarakmembaca.com என்ற இணையத் தளத்தை நாடலாம்.
--பெர்னாமா


