NATIONAL

எரிவாயு குழாய் வெடிப்புப் பகுதிக்கு புதன்கிழமை ஊடகவியலாளர்கள் அழைத்துச் செல்லப்படுவர்

24 ஏப்ரல் 2025, 1:50 AM
எரிவாயு குழாய் வெடிப்புப் பகுதிக்கு புதன்கிழமை ஊடகவியலாளர்கள் அழைத்துச் செல்லப்படுவர்

ஷா ஆலம், ஏப். 24 - சுபாங் ஜெயா,  புத்ரா ஹைட்ஸில் வெடிப்பு மற்றும் எரிவாயு குழாய் தீ விபத்து நிகழ்ந்த இடத்திற்கு ஊடகவியலாளர்களை  போலீசார் எதிர்வரும் ஏப்ரல் 30ஆம் தேதி அழைத்துச் செல்வர்.

அதிகாரிகளால் அந்த இடத்தில் மேற்கொள்ளப்படும் மண் தோண்டும் பணியை  ஊடகவியலாளர்கள் நேரடியாகப் பார்ப்பதற்காக இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஹூசேன் ஓமார் கான் கூறினார்.

சம்பவ இடத்தை  அகழ்ந்தெடுக்கும் பணியின் போது வெடிப்புக்குள்ளான எரிவாயு குழாய் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், சமீபத்திய  நிச்சயமற்ற வானிலை காரணமாக  தொடர் கட்டப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன அவர் தெரிவித்தார்.

இந்த வாரம் ஒவ்வொரு நாளும்  பெய்து வரும்  மழையின் காரணமாகப் பணியில் பல  இடையூறுகளை நாங்கள் சந்தித்து வருகிறோம்.

அதிகாரிகள் மேற்கொள்ளும் பணிகளை ஊடகவியலாளர்கள் நேரில்  காணவும் சம்பவ இடத்தில் நடத்தப்படும் விசாரணை எவ்வளவு சிக்கலானது என்பதை அவர்கள் அறியவும்  வரும் புதன்கிழமை அந்தப் பகுதிக்கு ஒரு ஊடகப் பயணத்தை  நாங்கள் ஏற்பாடு செய்வோம் என்று அவர்  ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

சம்பவ இடத்தில் மண்ணைத் தோண்டும்  பணி கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில்  ஒரு வாரத்திற்குள் பூர்வாங்க  தொழில்நுட்ப விசாரணை அறிக்கை தயாராகிவிடும்  எனத் தாங்கள் எதிர்பார்ப்பதாக  ஹூசேன்  முன்னதாகக் கூறியிருந்தார்.

பூர்வாங்க அறிக்கை வெளியிடப்படுவதற்கு முன்பு காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை மற்றும் வேலையிட  பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை ஆகியவை தடயவியல் ஆய்வினை மேற்கொள்ளும் என்று அவர் கூறினார்.

மண்ணைத் தோண்டும் போது கண்டெடுக்கப்பட்ட மாதிரிகள் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் வெடிப்புக்கான காரணத்தை அடையாளம் காண உதவக்கூடிய பிற சிதறிய பாகங்களைத் தேடும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் சொன்னார்.

இம்மாதம் 1 ஆம் தேதி காலை 8.10 மணிக்கு  அப்பகுதியில் எரிவாயு குழாய் வெடிப்பு ஏற்பட்டது. இதனால் ஒரு பெருமளவில் தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்க கிட்டத்தட்ட எட்டு மணி நேரம் ஆனது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.