புத்ராஜெயா, ஏப்ரல் 22 - சமூக பாதுகாப்பு அமைப்பு (பெர்கெசோ) உறுப்பினர்களிடையே தொற்றா நோய்ச் சம்பவங்கள் அதிகரித்து வருவது வருத்தமளிக்கும் வகையில் உள்ளதாக மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் சீகியோங் தெரிவித்துள்ளார்.
கடந்தாண்டு முழுவதிலும், ஒவ்வொரு நாளும் சராசரியாக 80 பேர் பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மலேசியாவில் கிட்டத்தட்ட 23 லட்சம் பெரியவர்கள் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் உடல் பருமன் ஆகிய மூன்று வகையான முதன்மை தொற்றா நோய்களுக்கு ஆளாகுவது அடையாளம் காணப்பட்டுள்ளதாக பெர்கேசோவின் அறிக்கையைக் கோடி காட்டி ஸ்டீவன் கூறினார்.
நாட்டின் பொருளாதாரம் மற்றும் வளர்ச்சியை நோக்கி செயல்பட முக்கிய அம்சமாக பெர்கேசோ உறுப்பினர்கள் இருப்பதால், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை அமல்படுத்துவதன் அவசியத்தை அவர்கள் உணர வேண்டும் என்று ஸ்டீவன் வலியுறுத்தினார்.
2022ஆம் ஆண்டு முதல், இரண்டு ஆண்டு காலக்கட்டத்தில் தொற்றா நோயினால் உடல் உறுப்பு செயலிழந்த பெர்கெசோ உறுப்பினர்களின் எண்ணிக்கை 26.5 விழுக்காடாக அதிகரித்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
இந்நிலை, நாட்டின் தொழிலாளர்களின் உற்பத்தி திறனில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்றும் அவர் அச்சம் தெரிவித்தார்.
பெர்னாமா


