புத்ராஜெயா, ஏப். 22 - குழந்தைகளுக்கான கண்காட்சி ஒன்றில்
முழுமையில்லாத தேசியக் கொடி (ஜாலுர் கெமிலாங்) காட்சிக்கு
வைக்கப்பட்டுள்ளதை சித்தரிக்கும் வைரல் காணொளி தொடர்பில்
உள்துறை அமைச்சு விசாரணையைத் தொடக்கியுள்ளது.
தினசரி பத்திரிகை ஒன்று முழுமையில்லாத தேசியக் கொடியை தனது
முதல் பக்கத்தில் வெளியிட்ட முந்தையச் சம்பவம் தொடர்பில்
சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் அதே
விசாரணை பாணி இந்த சம்பவத்திலும் பின்பற்றப்படும் என்று உள்துறை
அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் கூறினார்.
தேசியக் கொடி என்பது நமது தேசிய அடையாளம் என்பதோடு அது
ஆழமானப் பொருளையும் முக்கியத்துவத்தையும் கொண்டுள்ளது என்பதை
அனைத்து தரப்பினருக்கும் நினைவூட்ட விரும்புகிறேன் என்று அவர்
சொன்னார்.
ஆகவே, மக்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தக்கூடிய அலட்சியம், கவனக்
குறைவு, அக்கறையின்மை போன்றச் செயல்கள் முற்றிலும் தடுக்கப்பட
வேண்டும் என்று இன்று இங்கு நடைபெற்ற உள்துறை அமைச்சின்
மாதாந்திர ஒன்று கூடும் நிகழ்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர்
கூறினார்.
டி.சி.பி. குழந்தைகள் கண்காட்சியின் சிங்கப்பூர் லோகேஷன் பேக்ஸ்
கண்காட்சிக் கூடத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த முழுமையடையாத
தேசிய கொடி சமூக ஊடகங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை
ஏற்படுத்தியது.
இதனிடையே, இந்த போன்ற தவற்றைச் செய்த சின் சியூ டெய்லி
பத்திரிகை மீதான விசாரணை குறித்து கருத்துரைத்த அமைச்சர், நடப்பு சட்டத் திட்டங்களுக்கு ஏற்பட பொறுப்புடனும் விவேகத்துடனும் விசாரணை நடத்தப்படும் என்றார்.
சின் சியூ பத்திரிகையிடமிருந்து நேற்று பதிலைப் பெற்றோம். அடுத்தக்
கட்ட நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர் அந்த பதிலை நாங்கள் ஆய்வு
செய்வோம் என்றார் அவர்.


