அலோர் ஸ்டார், ஏப். 22- மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த
சந்தேகத்தின் பேரில் இங்குள்ள தனியார் பள்ளி ஒன்றின் ஆசிரியரை
போலீசார் கைது செய்துள்ளனர்.
முப்பத்து நான்கு வயதுடைய அந்த ஆசிரியர் கடந்த சனிக்கிழமை மாலை
4.45 மணிக்கு கைது செய்யப்பட்டதாகக் கோத்தா ஸ்டார் மாவட்ட போலீஸ்
தலைவர் ஏசிபி சித்தி நோர் சலாவாத்தி சஹாட் கூறினார்.
இந்த பாலியல் தொல்லை தொடர்பில் 15 மற்றும் 25 வயதுடை இரு
பெண்கள் அலோர்ஸ்டார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளதாக
அவர் சொன்னார்.
முதலாவது புகாரை அந்த ஆசிரியரின் முன்னாள் மாணவியிடமிருந்து
கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி தாங்கள் பெற்றதாகக் கூறிய அவர், அந்த
ஆசிரியர் ஆபாச தொனியிலான விஷயங்களை தமக்கு அனுப்பியதோடு
தவறான உறவுக்கும் அழைத்ததாக அப்பெண் தனது புகாரில்
குறிப்பிட்டுள்ளார் என்றார்.
மற்ற மாணவிகளுக்கும் இதே போல் பாலியல் தொந்தரவு கொடுத்ததை
அறிந்தப் பின்னர் அந்த ஆசிரியருக்கு எதிராக அப்பெண் போலீசில் புகார்
செய்ததாக அவர் அறிக்கை ஒன்றில் கூறினார்.
தனக்கு ஆபாச செய்திகளை அனுப்பியதோடு தனது நிர்வாணப்
படங்களை அனுப்பும்படியும் தம்முடன் பாலியல் உறவு வைத்துக்
கொள்ளும்படியும் அந்த ஆசிரியர் வற்புறுத்தியாகக் கூறி மற்றொரு பெண்
கடந்த 19ஆம் தேதி போலீசில் புகார் செய்தார் என்றார் அவர்.
கைது செய்யப்பட்ட அந்த ஆசிரியர் தண்டனைச் சட்டத்தின் 509வது பிரிவு
மற்றும் 2017ஆம் ஆண்டு சிறார்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச்
சட்டத்தின் 15(ஏ)11வது பிரிவின் கீழ் விசாரணைக்காக நான்கு நாட்கள்
தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்று அவர் தெரிவித்தார்.
இதனிடையே, பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது
தொடர்பில் இங்குள்ள கியாட் வா தனியார் இடைநிலைப் பள்ளியைச்
சேர்ந்த ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பெர்னாமா
முன்னதாக செய்தி வெளியிட்டிருந்தது.


