கோலாலம்பூர், ஏப். 21- இங்குள்ள பாண்டான் பெர்டானவில் உள்ள
பொழுபோக்கு மையம் ஒன்றில் போதைப் பொருள் கலந்துள்ளதாக
சந்தேகிக்கப்படும் பானத்தை அருந்தியவாறு உல்லாசமாக இருந்த
இன்ஸ்பெக்டர் அந்தஸ்து கொண்ட உயர் போலீஸ் அதிகாரி ஒருவரை
புக்கிட் அமான் போதைப் பொருள் குற்றப்புலனாய்வு துறை அதிகாரிகள்
கைது செய்தனர்.
உளவுத் தகவலின் பேரில் நேற்று முன்தினம் மாலை 5.05 மணியளவில்
அந்த பொழுதுபோக்கு மையத்தில் புக்கிட் அமான் போதைப் பொருள்
குற்றப்புலனாய்வுத் துறையினர் மேற்கொண்ட அதிரச் சோதனையின்
போது 43 வயதான அந்த போலீஸ் அதிகாரி கைது செய்யப்பட்டதாக
வட்டாரம் ஒன்று கூறியது.
அந்த அதிகாரியிடம் நடத்தப்பட்ட சிறுநீர் சோதனையில் அவர்
அம்ஃபேதமினா, மெத்தம்பெத்தமினா, கெத்தமின், பென்ஸோ ஆகிய நான்கு
வித போதைப் பொருள்களை உட்கொண்டிருப்பது தெரிய வந்தது என
அவ்வட்டாரம் தெரிவித்தது.
அந்த பொழுதுபோக்கு மையத்தில் பான வடிவிலான அந்த போதைப்
பொருளை எடுத்ததை அந்த அதிகாரி ஒப்புக் கொண்டதோடு உள்நாட்டு
ஆடவர் ஒருவர் அந்த போதைப் பொருளை விநியோகித்தார் எனவும்
தெரிவித்துள்ளார்.
அந்த அதிகாரி கைது செய்யப்பட்டதை சிலாங்கூர் மாநில போலீஸ்
தலைவர் டத்தோ ஹூசேன் ஓமார் கான் உறுதிப்படுத்தினார்.
இந்த சம்பவம் குறித்து சிலாங்கூர் மாநில போலீசார் விசாரணை நடத்தி
வருகின்றனர். 1952ஆம் ஆண்டு அபாயகர போதைப் பொருள் சட்டத்தின்
15(1)(ஏ) பிரிவின் கீழ் விசாரணைக்காக அந்த அதிகாரி இரு தினங்களுக்கு
தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என அவர் சொன்னார்.


