ஷா ஆலம், ஏப். 20- லங்காட் ஆற்றின் புக்கிட் சங்காங் நிலையத்தில் நீர்மட்டம் இன்று காலை 10.00 மணி நிலவரப்படி அபாய அளவை விட தாண்டி 4.37 மீட்டரை எட்டியது.
மேலும், கம்போங் சுங்கை செலிசிக் நிலையம் 26.8 மீட்டர் அளவைத் தொட்டு எச்சரிக்கை மட்டத்தில் உள்ளதாக சிலாங்கூர் நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறை (ஜே.பி.எஸ்.) வெளியிட்ட தகவல் வரைபடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தவிர, மேலும் ரந்தாவ் பாஞ்சாங் (6.53 மீட்டர்), டெங்கில் (6.66 மீட்டர்), எஸ்.கே.சி.பாலம் (18.21 மீட்டர்) மற்றும் கம்போங் தீமா புக்கிட் பெருந்தோங் (18.93 மீட்டர்). ஆகிய நான்கு நிலையங்கள் எச்சரிக்கை நிலையில் உள்ளன.
இதனிடையே, கோல லங்காட் நீர்பாசனம் மற்றும் வடிகால் துறை நடத்திய கள ஆய்வில் புக்கிட் சங்காங் பகுதியில் உள்ள லங்காட் ஆற்றில் நீர்மட்டம் 4.37 மீட்டரை எட்டியுள்ளதாக சிலாங்கூர் மாநில ஜே.பி.எஸ். இயக்குநர் டத்தோ டிஎஸ் முகமது நஸ்ரி யாஸ்மின் கூறினார்.
லங்காட் ஆற்றில் நீர்மட்டம் அபாய அளவை விட அதிகமாக உள்ளது என்பதை இது உறுதிப்படுத்துகிறது. இருப்பினும், 4.90 மீட்டராக இருக்கும் லங்காட் ஆற்றின் அணையின் அளவு காரணமாக லங்காட் ஆற்று நீர் நிரம்பி குடிருப்புக்கு பெருக்கெடுப்பதை கட்டுப்படுத்த முடிகிறது என்று அவர் சொன்னார்.
மேலும், சுங்கை லங்காட்டில் நான்கு நீர் இறைப்பு பம்ப் இயந்திரங்கள் இயங்கப் படுகின்றன என்று சிலாங்கூர்கினி தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.
இதனைக் கருத்தில் கொண்டு பொதுமக்கள், குறிப்பாக புக்கிட் சங்காங் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் வெள்ளம் ஏற்பட்டால் அதை எதிர்கொள்ள எப்போதும் தயாராக இருக்குமாறு அவர் அறிவுறுத்தினார்.
லங்காட் ஆற்றில் நீர் மட்டத்தை ஜே.பி.எஸ். தொடர்ந்து கண்காணித்து, வருவதோடு குடியிருப்புப் பகுதிகளிலுள்ள நீர் லங்காட் ஆற்றுக்கு வெளியேற்றப்படுவதை உறுதிசெய்ய நீர் இறைப்பு பணிகளை செயல்படுத்தும் என்று அவர் கூறினார்


