கோத்தா பாரு, ஏப்ரல் 16 - பொது நடவடிக்கைப் படையின் 8வது பட்டாளம் நேற்று தானா மேரா மற்றும் பாசிர் மாஸில் நடத்திய ஓப்ஸ் தாரிங் நடவடிக்கையின் போது தாய்லாந்திலிருந்து கடத்தி வரப்பட்டதாக நம்பப்படும் 10 மாடுகள் மற்றும் 25 ஆடுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
தானா மேரா, பெல்டா கெமாஹாங் 3இல் இரவு 8.45 மணிக்கு மேற்கொள்ளப்பட்ட முதலாவது நடவடிக்கையின்போது சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்பட்ட லோரியை தாங்கள் தடுத்து நிறுத்தியதாக பி.ஜி.ஏ. தென்கிழக்கு படைப்பிரிவின் கமாண்டர் டத்தோ நிக் ரோஸ் அசான் நிக் அப்துல் ஹமிட் கூறினார்.
அந்த லோரியை சோதனை செய்ததில் அதில் 25 ஆடுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றின் மதிப்பு 177,500 வெள்ளி என மதிப்பிடப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட லோரியை ஓட்டி வந்த 33 வயது நபர் கால்நடை தொடர்பான எந்த செல்லுபடியாகும் ஆவணங்களையும் சமர்ப்பிக்கத் தவறியதற்காக கைது செய்யப்பட்டார் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இதற்கிடையில், பாசிர் மாஸ் கம்போங் லுபோக் செடோலிலிருந்து கம்போங் புக்கிட் தண்டோக் செல்லும் தடத்தில் மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது சோதனை நடவடிக்கையில் லோரி ஒன்றைத் தடுத்து நிறுத்திஹ்தன் ஓட்டுநரான 43 வயது நபரை கைது செய்ததன் மூலம் கால்நடை கடத்தல் நடவடிக்கையை தமது தரப்பு வெற்றிகரமாக முறியடித்ததாக அவர் கூறினார்.
அந்த லோரியில் 10 மாடுகள் இருப்பது கண்டறியப்பட்டது. அவற்றின் மதிப்பு 96,000 என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஓட்டுநர் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்கத் தவறிவிட்டார் என்று அவர் சொன்னார்.
இந்த இரண்டு வழக்குகளும் 1953ஆம் ஆண்டு விலங்குகள் சட்டத்தின் 36(1) பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் கைப்பற்றப்பட்ட அனைத்து கால்நடைகளும் மேல் நடவடிக்கைக்காகக் கிளந்தான் கால்நடை சேவைத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.


