சிப்பாங், ஏப்ரல் 14- கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலைய (கே.எல்.ஐ.ஏ.) சுயேச்சை வர்த்தக மண்டலத்தில் கடந்த மாதம் 2 கோடியே 5 லட்சத்து 70 ஆயிரம் வெள்ளி மதிப்புள்ள 210 கிலோகிராம் எடையுள்ள கஞ்சா என சந்தேகிக்கப்படும் போதைப்பொருட்களை கடத்தும் முயற்சியை அரச மலேசிய சுங்கத் துறை வெற்றிகரமாக முறியடித்துள்ளது.
அந்தப் பகுதியில் செயல்படும் ஒரு விமான சரக்கு முனைய நடத்துநரிடம் தனது துறை நடத்திய சோதனையின் போது அந்த போதைப்பொருள் பறிமுதல் செய்யப் பட்டதாக மத்திய மண்டல சுங்கத்துறையின் செயல்பாட்டு உதவி தலைமை இயக்குநர் டாக்டர் அகமது தௌபிக் சுலைமான் கூறினார்.
அதிகாரிகளைக் திசை திருப்புவதற்காக சிற்றுண்டிப் பொருள்ஜகள் மற்றும் வளர்ப்பு பிராணி உணவுப் பொட்டலங்களில் போதைப்பொருள்களை மறைப்பதே கும்பலின் கடத்தல் பாணியாகும்.
இந்த போதைப்பொருள் தென்கிழக்காசிய நாட்டிலிருந்து கடத்தப்பட்டு மலேசியா வழியாக ஐரோப்பாவில் உள்ள இறுதி இலக்குக்கு அனுப்பப்படவிருந்ததாக நம்பப்படுகிறது என்று அவர் இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
இந்த பறிமுதல் தொடர்பில் யாரும் கைது செய்யப்படவில்லை எனக் கூறிய அவர், 1952 ஆம் ஆண்டு அபாயகர போதைப்பொருள் சட்டத்தின் 39பி(1)(ஏ) பிரிவின் கீழ் வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகச் சொன்னார்.


