(ஆர்.ராஜா)
ஷா ஆலம், ஏப். 11- ஷா ஆலம், கிள்ளான் பள்ளத்தாக்கின் பல பகுதிகளில் நேற்றிரவு
தொடங்கி பெய்து வரும் கனமழை காரணமாகப் பல பகுதிகளில் திடீர்
வெள்ளம் ஏற்பட்டுள்ளது. பல சாலைகள் நீரில் மூழ்கிய காரணத்தால்
வாகனப் போக்குவரத்து முற்றாக நிலை குத்தியது.
வெள்ளம் காரணமாக ஷா ஆலம், கிள்ளான், சுபாங் ஜெயா, பூச்சோங்
உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலைகளில் கடும் நெரிசல் ஏற்பட்டதைத்
தொடர்ந்து வாகனங்கள் நகர முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பலர்
வேலைக்கு தாமதமாக செல்லும் சூழல் உண்டானது.
இந்த தீடீர் வெள்ளத்தில் கிள்ளான் மாவட்டத்தின் மேரு, தாமான் ஸ்ரீ
மூடா, டேசா கெமுனிங் உள்ளிட்ட இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக
வடிகால், நீர்பாசனத் துறை கூறியது.
மேலும், பண்டார் பாரு கிள்ளான், உலு லங்காட் 12வது மைல், டிங்கில்,
புக்கிட் சங்காங் ஆகிய பகுதிகளில் உள்ள வெள்ள கண்காணிப்பு
நிலையங்கள் அபாய அளவையும் பூச்சோங் ட்ரோப், பெக்கான் பாங்கி
லாமா, கிள்ளான் கம்போங் ஜாவா, ரிம்பா கேடிஆர், புக்கிட் ரீமாவ்,
கம்போங் ஜோஹான் செத்தியாவிலுள்ள நிலையகங்கள் எச்சரிக்கை
அளவையும் காட்டுவதாக அது குறிப்பிட்டது.
இதனிடையே, ஷா ஆலம், செக்சன் 25, தாமான் ஸ்ரீ லெம்போயுங்கில்
வெள்ளம் அபாயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து குடியிருப்பாளர்கள் தங்கள்
வாகனங்களை விரைந்து வெளியேற்றுவதற்கு ஏதுவாக ஷா ஆலம் மாநகர் மன்றம் கெமுனிங்-ஷா ஆலம் நெடுஞ்சாலையின் தாமான் ஸ்ரீ மூடா டோல் சாவடி அருகே தற்காலிக வழித்தடத்தை ஏற்படுத்தித் தந்துள்ளது.
மேலும், ஜாலான் பத்து 3 லாமா, ஜாலான் லாபா, 3 23/14சி, ஜாலான்
ஈஜோக் ஆகிய சாலைகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக அது தனது
பேஸ்புக் பதிவில் கூறியது.
இதனிடையே, வெள்ளம் அபாயம் அதிகம் உள்ள பகுதியான தாமான் ஸ்ரீ
மூடாவில் இன்று காலை 10.00 மணி நிலவரப்படி கால்வாய்களின் நீர்
நிறைந்து காணப்படுகிறது. இங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பல வெள்ளத் தடுப்புத் திட்டங்கள் காரணமாக வீடுகளில் வெள்ளம் ஏற்படும் அபாயம்
தவிர்க்கப்படுள்ளதாகக் கருதப்படுகிறது.
சிலாங்கூர், புத்ரா ஜெயா மற்றும் கோலாலம்பூரில் இன்று காலை வரை
இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய அடை மழை பெய்யும்
என மலேசிய வானிலை ஆய்வுத் துறை எச்சரித்துள்ளது.


