ஷா ஆலம், ஏப். 11- புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்காலிகக் குடியிருப்புகள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
இவ்விவகாரத்தில் விவேகத் தீர்வைக் காண்பதற்காக பெர்மோடாலன் நேஷனல் (பி.என்.பி.) மற்றும் மலேசியா பெர்பாடானான் பிரிமா பெர்ஹாட் (பிரிமா) ஆகியவை ஒன்றுபட்டு செயல்பட்டு வருவதாக வீடமைப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ போர்ஹான் அமான் ஷா கூறினார்.
புத்ரா ஹைட்ஸ் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை சிப்பாங் கோத்தா வாரிசானில் தங்க வைப்பதற்கான சிலாங்கூர் விவேக வாடகைத் திட்டத்திற்கு இதுவரை 10 விண்ணப்பங்கள் வந்துள்ளதாக அவர் சொன்னார்.
பள்ளிகளுக்கு சற்று தொலைவில் இருப்பதாக பள்ளி செல்லும் வயதில் பிள்ளைகளைக் கொண்டிருப்பவர்கள் சொல்வதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். ஆனால் திருமணமாகாதவர்கள் அல்லது இன்னும் பள்ளிக்குச் செல்லாத பிள்ளைகள் மற்றும் கம்போங் கோல சுங்கை பாருவில் வாடகைக்கு வசிப்பவர்களுக்கு இது மிகவும் பொருத்தமானதாக இருக்கலாம் என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் கூறினார்
பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்காலிக வீடுகளை வழங்குவதற்காக புத்ரா ஹைட்ஸ் பகுதியில் உள்ள வீடமைப்பு மேம்பாட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மாநில அரசு முயற்சித்து வருவதாக போர்ஹான் மேலும் தெரிவித்தார்.
இதனிடையே, பாதிக்கப்பட்டவர்கள் தங்குவதற்கு ஏர்பிஎன்பி திட்டத்தில் மேம்பாட்டாளர் வழங்கிய 78 தற்காலிக குடியிருப்புகளில் 16ஐ பாதிக்கப்பட்ட குடும்பங்கள ஏற்றுக்கொண்டதாக அவர் கூறினார்.
இதுவரை 16 குடும்பங்கள் மட்டுமே ஏர்பிஎன்பி குடியிருப்புகளில் சேர்ந்துள்ளன. அந்த குடியிருப்புகள் பூச்சோங் பகுதியில் உள்ளன. மேலும் குடியிருக்க விரும்புவோருக்கு எங்களிடம் இன்னும் பல வீடுகள் உள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.


