சுங்கை பூலோ, ஏப் 8 - புஞ்சாக் அலாம், ஜாலான் ஆலம் சூரியா, பிரிவு 16 இல் இரண்டு வீடுகளில் கொள்ளையடிக்க முயன்ற பாராங் கத்தி ஏந்திய இரு நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இதே சம்பவம் தொடர்பாக இரண்டு புகார்கள் அந்தப் பகுதியில் இருந்து கிடைத்துள்ளதாக மாவட்டகாவல்துறை தலைவர் சுப்ரிட்டெண் முகமட் ஹபிஸ் முகமட் நோர் கூறினார்.
இரவு 11 மணியளவில் தனது வீட்டின் பின்னால் முகமூடி அணிந்த மற்றும் பாராங் கத்தி ஏந்திய இரண்டு ஆடவர்கள் இருந்ததைத் கண்டதாக 44 வயதுடைய புகார்தாரர் ஒருவர் தெரிவித்திருந்ததை முகமட் ஹபிஸ் சுட்டிக்காட்டினார்.
சந்தேக நபர்கள் புகார்தாரர் மற்றும் அவரது மனைவியை நோக்கி பாராங்கை காட்டி மிரட்டியுள்ளனர். இதனைத் தொடர்ந்து புகார்தாரரின் மனைவி உதவிக்காக அலறியதால் அந்த இரு சந்தேகப் பேர்வழிகள் அங்கிருந்து தப்பியோடியதாக முகமட் ஹபிஸ் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து குற்றவியல் சட்டத்தின் 393 ஆவது பிரிவின் கீழ் காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி பதிவுகள் உட்பட தகவல் அல்லது வீடியோ காட்சிகளைக் பொதுமக்கள் முன்வந்து வழங்கி காவல்துறை விசாரணைக்கு ஒத்துழைக்கும்படி முகமட் ஹபிஸ் கேட்டுக்கொண்டார்.


