கோலாலம்பூர், ஏப். 6 - சுபாங் ஜெயா, புத்ரா ஹைட்ஸில் எரிவாயு குழாய் தீ விபத்து நடந்த இடத்தில் ஏற்பட்ட பள்ளத்தில் தேங்கிய மழைநீரை வெளியேற்றுவதில் பாதிக்கப்பட்ட பகுதிக்கான மேலாண்மைப் பணியின் ஆறாவது நாளான இன்று கவனம் செலுத்தப்படுகிறது.
பாதுகாப்பு மதிப்பீடுகளை மீண்டும் தொடங்குவதற்கு இந்தப் பணி மிகவும்ஒ முக்கியமானது என்று சுபாங் ஜெயா காவல்துறைத் தலைவர் ஏசிபி வான் அஸ்லான் வான் மாமட் கூறினார்.
இன்று காலை எங்கள் கவனம் முழுவதும் பள்ளத்தின் மீது உள்ளது. ஏனெனில் பாதுகாப்பு மதிப்பீடுகளைத் தொடர்வதற்கு முன்பு அதில் தேங்கியுள்ள அதிகளவிலான தண்ணீரை வெளியேற்ற வேண்டும் என்று அவர் பெர்னாமாவிடம் கூறினார் .
இதற்கிடையில், சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹூசேன் ஓமார் கான் இன்று மாலை 4 மணிக்கு புத்ரா ஹைட்ஸில் உள்ள கள கட்டளைப் பகுதியில் செய்தியாளர் சந்திப்பை நடத்த உள்ளார்.
பள்ளம் ஏற்பட்ட இடத்தில் வெள்ளம் காரணமாக மேற்கொள்ளப்படும் இறுதி பாதுகாப்பு மதிப்பீடு இன்று நிறைவடையும் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தலைமை இயக்குநர் டத்தோ நோர் ஹிசியாம் முகமது நேற்று கூறியிருந்தார்.
இந்த சம்பவம் குறித்த கண்டுபிடிப்புகள் விரைவில் மாநில பேரிடர் மேலாண்மைக் குழுவிடம் சமர்ப்பிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
கடந்த செவ்வாய்க்கிழமை காலை 8.10 மணிக்கு பெட்ரோனாஸ் எரிவாயு குழாய் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக 30 மீட்டருக்கும் அதிக உயரத்திற்கு தீப்பிழம்புகள் எழுந்தன. வெப்பநிலை 1,000 டிகிரி செல்சியஸை எட்டியது. தீயை அணைக்க கிட்டத்தட்ட எட்டு மணி நேரம் ஆனது.
இந்த சம்பவத்திலா மொத்தம் 87 வீடுகள் வசிப்பதற்கு தகுதியற்ற அளவுக்கு முற்றிலும் சேதமடைந்தன. அதே நேரத்தில் 148 வீடுகள் ஒருபகுதி சேதமடைந்தன.
நேற்று வரை, பாதிக்கப்பட்ட 509 குடும்பங்கள் தற்காலிக நிவாரண மையங்களில் பதிவு செய்துள்ளன. நோன்புப் பெருநாளுக்குப் பிறகு குடியிருப்பாளர்கள் தங்கள் சொந்த ஊர்களிலிருந்து திரும்பும்போது இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


