சுபாங் ஜெயா, ஏப். 4 - எரிவாயு குழாய் வெடிப்பினால் தீ விபத்து ஏற்பட்ட
புத்ரா ஹைட்ஸ் பகுதிக்கு செர்வ் எனப்படும் சிலாங்கூர் தன்னார்வலர் குழு
உறுப்பினர்கள் 100 பேர் அனுப்பப்பட்டுள்ளனர்.
தாமான் புத்ரா ஹர்மோனி பகுதியைச் சுற்றியுள்ள சாலைகளை
இலக்காகக் கொண்டு இன்று காலை 10.20 மணியளவில் அவர்கள் தங்கள்
பணியைத் தொடக்கியதாக செர்வ் செயலக அதிகாரி ஷாபிக் சாலே
கூறினார்.
இந்த துப்புரவுப் பணிகளை கூடிய விரைவில் முடிக்க நாங்கள்
திட்டமிட்டுள்ளோம். இருப்பினும் சூழ்நிலையைப் பொறுத்து இது
அமையும். இந்த தன்னார்வலர்கள் அனைவரும் அருகிலுள்ள புத்ரா
அவென்யு பகுதியைச் சேர்ந்தவர்களாவர் என்று அவர் சொன்னார்.
போலீசாரின் தீவிர கண்காணிப்பின் கீழ் இந்த துப்புரவு பணிகளை செர்வ்
உறுப்பினர்கள் பணிகளை மேற்கொள்வர். இந்த பணியின் போது படம்
பிடிப்பதற்கு அல்லது குடியிருப்பாளர்களின் வீடுகளில் நுழைவதற்கு
அவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று ஷாபிக் குறிப்பிட்டார்.
பாதிக்கப்பட்ட பகுதியில் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டவுடன்
அப்பகுதியை சீரமைக்கும் பணி கட்டங் கட்டமாக மேற்கொள்ளப்படும்
என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி நேற்று கூறியிருந்தார்.
கடந்த செவ்வாய்க்கிழமை காலை 8.10 மணியளவில் ஏற்பட்ட எரிவாயு
குழாய் தீவிபத்தில் தாமான் புத்ரா ஹர்மோனி குடியிருப்பு பகுதி
கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
இந்த பேரிடரின் போது தீ சுமார் 30 மீட்டர் உயரத்திற்கு கொளுந்துவிட்டு
எரிந்ததோடு அதன் வெப்பம் 1,000 டிகிரி செல்சியசை எட்டியது.


