கோலாலம்பூர், ஏப். 3 - சுபாங் ஜெயா, புத்ரா ஹைட்ஸில் நேற்று முன்தினம்
ஏற்பட்ட தீவிபத்தில் பாதிக்கப்பட்ட வீடுகளுக்குச் சென்று நிலைமையைப்
பார்வையிட 115 குடியிருப்பாளர்களுக்கு கட்டங் கட்டமாக அனுமதி
வழங்கப்பட்டுள்ளது.
வயரிங் எனப்படும் மின் இணைப்பு கம்பி முறை உள்பட வீடுகளுக்கு
ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் கண்டறிவதற்காக முதல் கட்டமாக இன்று
காலை 9.30 மணியளவில் ஜாலான் 1/3ஏ குடியிருப்பைச் சேர்ந்த 41 பேர்
உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டதாகப் பெட்டாலிங் மாவட்ட அதிகாரி
ஹசுனுல் கைடில் முகமது கூறினார்.
வயரிங் முறையில் எந்த பாதிப்பும் ஏற்பாமலிருந்தால் சம்பந்தப்பட்ட
வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படும். அந்த வீடுகள் குடியிருப்பதற்கு
பாதுகாப்பானவை என்பது சோதனையில் தெரியவந்தால்
குடியிருப்பாளர்கள் வீடு திரும்ப அனுமதிக்கப்படுவர் என்று சம்பவ
இடத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.
மொத்தம் 41 வீடுகளை உள்ளடக்கிய முதல் கட்ட சோதனை நடவடிக்கை
முடிவுக்கு வந்தவுடன் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட சோதனைகள்
தொடங்கப்படும் என அவர் சொன்னார்.
பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்கள் காலை 8.00 மணிக்கே அதிகாரிகள்
குறிப்பட்ட இடத்தில் காத்திருப்பதை பெர்னாமா மேற்கொண்ட ஆய்வில்
தெரியவந்தது.
அப்பகுதியிலுள்ள 115 வீடுகளில் மின் இணைப்பு கம்பிகள் மீதான
சோதனையை தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையும் தெனாகா நேஷனல்
பெர்ஹாட் நிறுவனமும் மேற்கொள்ளும் என்று பெட்டாலிங் ஜெயா
மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் அஸ்லான் வான் மாமாட் நேற்று
கூறியிருந்தார்.
எரிவாயு குழாய் தீவிபத்தில் பாதிக்கப்பட்ட வீடுகளில் தீயணைப்பு மற்றும்
மீட்புத் துறை சோதனை மேற்கொண்டதாகவும் அவற்றில் பெரும்பாலான
வீடுகள் பாதுகாப்பானதாகவும் குடியிருப்பதற்கு ஏற்ற நிலையிலும்
உள்ளதாகவும் கருதப்படுகிறது என்றார் அவர்.


