கோலாலம்பூர், மார்ச் 28 - தென் சூடானில் நிலைமை மோசமடைந்து வருவதால் தங்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து போக்குவரத்து விமானச் சேவை இருக்கும் காலத்திற்குள் அந்நாட்டை விட்டு வெளியேறும்படி மலேசியர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
தென் சூடானில் நிச்சயமற்ற நிலைமை நீடித்து வருவதைத் தொடர்ந்து
அந்நாட்டின் நிலவரங்களை கென்யா நாட்டின் நைரோபியில் உள்ள
மலேசிய தூதரகத்தின் வாயிலாக தாங்கள் அணுக்கமாகக் கண்காணித்து
வருவதாக விஸ்மா புத்ரா என அழைக்கப்படும் வெளியுறவு அமைச்சு
கூறியது.
அந்நாட்டில் பதற்ற நிலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் அங்கு பாதுகாப்புக்கு மிகுந்த ஆபத்து ஏற்படுள்ளது ஆகவே, அந்நாட்டிலுள்ள மலேசியர்கள் தங்கள் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து விமான போக்குவரத்து இருக்கும் போதே அந்நாட்டை விட்டு வெளியேறும்படி கேட்டுக் கொள்கிறோம் என அமைச்சு அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டது.
கிடைக்கின்ற வழிகளைப் பயன்படுத்தி சூடானிலுள்ள மலேசியர்களுடன்
தூதரகம் தொடர்பு கொண்டு வருகிறது. மேலும் ஐக்கிய நாடுகள் சபையின்
கீழ் அந்நாட்டில் பணியாற்றி வரும் 18 மலேசிய போலீஸ்காரர்கள் குறித்த
தகவல்களைப் பெறுவதற்காக அதிகாரிகள் ஐ.நா.வுடன் தொடர்பு கொண்டு
வருகின்றனர் என்று அது தெரிவித்தது.
அங்கு அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாகக் கூறிய வெளியுறவு அமைச்சு, தென் சூடானுக்கு பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்கும்படி மலேசியர்களைக் கேட்டுக் கொண்டது.
வெளி நாடுகளில் உள்ள மலேசியர்களின் பாதுகாப்பு மற்றும் நலனில் அரசாங்கம் எப்போதும் முக்கிய கவனம் செலுத்தி வரும். வெளியுறவு அமைச்சு நிலைமையை அணுக்கமாகக் கண்காணித்து வரும் வேளையில் அவசியம் ஏற்படும் பட்சத்தில் தேவையான ஆலோசனைகளை வழங்கும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


