சுபாங் ஜெயா, மார்ச் 27 - பெருநாள் கால உச்சவரம்பு விலைத் திட்டத்தை அமல்படுத்துவதன் மூலம் நோன்பு பெருநாளின் போது பொருட்களின் விலை கட்டுப்பாட்டிற்குள் இருப்பதையும் உணவுப் பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்படாமலிருப்பதையும் உறுதி செய்ய முடிகிறது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு மற்றும் வேளாண்மை மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சின் தொடர்ச்சியான நடவடிக்கைகளின் விளைவாக குறிப்பிட்ட காலகட்டத்தில் சில உணவுப் பொருட்களின் விலையும் மலிவாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
உணவுப் பொருட்களுக்கு எந்தப் பற்றாக்குறையும் நிலவவில்லை. மேலும் உச்சவரம்பு விலைத் திட்டத்தின் மூலம் பொருள் விலை குறிப்பாக முட்டைகள் மற்றும் பல பொருட்களின் விலை குறைவாக இருப்பதை உறுதி செய்ய முடிந்தது என்று அவர் இன்று யுஎஸ்ஜே சுபாங் மைடின் பேரங்காடியில் பொருட்களின் விலைகளைச் சரிபார்ப்பதற்கான சிங்கா மடாணி திட்டத்தைத் தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.
உள்நாட்டு வர்த்தக மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சர் டத்தோ அர்மிசான் முகமது அலி, சிலாங்கூர் மந்திரிரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி மற்றும் மைடின் முகமது ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் நிர்வாக இயக்குனர் டத்தோ அமீர் அலி மைடின் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
மக்களுக்கு நியாயமான விலையில் பொருள்களை வழங்கும் திட்டத்தில் பங்கேற்றதற்காக மைடின் நிர்வாகத்திற்கும் அன்வார் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
மக்களின் நல்வாழ்வு தொடர்ந்து பராமரிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக மடாணி அரசாங்கத்தால் செயல்படுத்தப்பட்ட முயற்சிகள் மற்றும் கொள்கைகள் குறித்த தகவல்களை வழங்குவதே சிங்கா மடாணி திட்டத்தின் நோக்கமாகும்.


